Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ உர விற்பனையில் ரூ.250 கோடி ஊழல்: ஆந்திர முதல்வர் மீது ஜெகன் குற்றச்சாட்டு

உர விற்பனையில் ரூ.250 கோடி ஊழல்: ஆந்திர முதல்வர் மீது ஜெகன் குற்றச்சாட்டு

உர விற்பனையில் ரூ.250 கோடி ஊழல்: ஆந்திர முதல்வர் மீது ஜெகன் குற்றச்சாட்டு

உர விற்பனையில் ரூ.250 கோடி ஊழல்: ஆந்திர முதல்வர் மீது ஜெகன் குற்றச்சாட்டு

ADDED : செப் 11, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
அமராவதி: ''ஆந்திராவில் செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் 250 கோடி ரூபாய் வரை ஆளும் சந்திரபாபு நாயுடு அரசு ஊழல் செய்துள்ளது,'' என, அம்மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டிஉள்ளார்.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு விவசாயிகளுக்கான உரங்கள் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

விளைப் பொருட்களுக்கான ஆதார விலை, விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

இந்தச் சூழலில் செயற்கையான உரத் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால், விவசாயிகள் தற் கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

மாநிலத்திற்கு வரும் உரங்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்கு திருப்பிவிடப்பட்டதே தற்போதைய தட்டுப்பாட்டுக்கு காரணம்.

சந்திரபாபு நாயுடுவின் ஆதரவுடன், கள்ளச்சந்தையில் உர விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதன் மூலம் 250 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது.

இந்த ஊழல் பணம், உயர்ந்த இடத்தில் இருக்கும் தலைவர்கள் முதல் கடைகோடியில் இருக்கும் நிர்வாகிகள் வரை பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார் .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us