சாதாரண வழக்குகளுக்கு ஜாமின் இழுத்தடிப்பதா? : சுப்ரீம் கோர்ட் வேதனை
சாதாரண வழக்குகளுக்கு ஜாமின் இழுத்தடிப்பதா? : சுப்ரீம் கோர்ட் வேதனை
சாதாரண வழக்குகளுக்கு ஜாமின் இழுத்தடிப்பதா? : சுப்ரீம் கோர்ட் வேதனை
ADDED : மார் 18, 2025 11:06 PM

புதுடில்லி : மிக சாதாரண வழக்குகளில் கூட விசாரணை நீதிமன்றங்கள் ஜாமினை நிராகரிப்பது வருத்தம் அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
ஆனாலும், இவரது ஜாமின் மனுக்களை விசாரணை நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. ஜாமின் கிடைக்காமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
இதையடுத்து, ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியது, ஒரு ஜனநாயக நாடு, போலீஸ் அரசைப் போல செயல்படக் கூடாது.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், சிறிய வழக்குகளின் ஜாமின் கோரும் மனுக்கள் மிகவும் அரிதாகவே உயர் நீதிமன்றம் வரை வரும். ஆனால் இன்றோ, விசாரணை நீதிமன்ற அளவிலேயே முடிய வேண்டிய வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை வருகின்றன. இது, நீதித்துறையின் சுமையை கூட்டுகிறது.
மாஜிஸ்திரேட்களால் முடித்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய ஜாமின் வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டு மனுதாரருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.