Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'

மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'

மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'

மஹாராஷ்டிரா, கோவாவில் கனமழை கொட்டும்: வானிலை மையம் 'அலர்ட்'

Latest Tamil News
புதுடில்லி: மத்திய அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மஹாராஷ்டிரா மற்றும் கோவாவில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

இந்திய வானிலை மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், 'மத்திய கிழக்கு அரபிக்கடலில், கோவா, தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால், நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. தெற்கு கொங்கன் கடற்பகுதிக்கு அப்பால் நிலை கொண்டுள்ள இது, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்' எனத் தெரிவித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று( மே 23) பகல் 12:30 மணிக்கு வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கோவா மாநிலத்திற்கு ரெட் அலர்ட்டும், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது.

கோவா


கோவா மாநிலத்திற்கு ஞாயிறு 25 வரை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. நேற்று கோவாவின் வடக்குப்பகுதியில் உள்ள பஞ்சிம் பகுதியில் 9 செ.மீ., மழை பதிவானது. இது வரும் நாட்களில் கோவா, கொங்கன், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனையடுத்து கோவா மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

மும்பை


மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் எனவும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இன்று லேசான மழை பெய்து வருகிறது. நாள் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

ராய்காட், ரத்னகிரி பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்நகரங்கள் அருகில் உள்ள தானே, பல்ஹர், சிந்துதுர்க், சதாரா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

தானே மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் பள்ளம் ஏற்பட்டது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us