ஆமதாபாத்தில் நெஞ்சைப்பிழியும் துயரம்; லண்டன் புறப்பட்ட விமானம் வெடித்துச் சிதறியது; உயிரிழந்த 204 பேர் உடல் மீட்பு
ஆமதாபாத்தில் நெஞ்சைப்பிழியும் துயரம்; லண்டன் புறப்பட்ட விமானம் வெடித்துச் சிதறியது; உயிரிழந்த 204 பேர் உடல் மீட்பு
ஆமதாபாத்தில் நெஞ்சைப்பிழியும் துயரம்; லண்டன் புறப்பட்ட விமானம் வெடித்துச் சிதறியது; உயிரிழந்த 204 பேர் உடல் மீட்பு

விமானத்தில் பயணித்தவர்கள்
விபத்துக்குள்ளான போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த 7 பேர் பயணித்தனர். அவர்களுடன் 12 ஊழியர்களும் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.
204 சடலம் மீட்பு
தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சிலரது சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளன. அவற்றை உறவினர்கள் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் கண்டறிய மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
டிஜிசிஏ விளக்கம்
விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ எனப்படும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கினர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார்.
மருத்துவ மாணவர்கள் பலி
விமானம் நொறுங்கி விழுந்ததில், அந்த இடத்தில் அமைந்திருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 5 மாணவர்கள் உயிரிழந்தனர். சுற்று வட்டார குடியிருப்புகளில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.
ஹெல்ப்லைன்
விபத்தை தொடர்ந்து ,ஆமதாபாத் சிவில் மருத்துவமனை அதிர்ச்சி (அவசர) மையத்தில் நோயாளி தொடர்பான தகவலுக்கு தொடர்பு கொள்ள மருத்துவமனை நிர்வாகம், 6357373831, 6357373841 ஆகிய இரண்டு ஹெல்ப்லைன் எண்கள் வெளியிட்டுள்ளது.
பிரதமர் ஆலோசனை
விமான விபத்தைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அவர்களை ஆமதாபாத் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.
இரங்கல்
விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிதலைவர் ராகுல் உள்ளிட்ட இந்திய தலைவர்கள், பல மாநில முதல்வர்கள், மற்றும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் , கனடா பிரதமர் மார்க் கார்னி, ஆஸி., பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், பிரிட்டன் மன்னர் சார்லஸ் , அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய அதிபர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,இத்தாலி பிரதமர் மெலோனி, வங்கதேச அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ், உள்ளிட்ட உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ரூ.1 கோடி நிவாரணம்
டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்பதுடன், அவர்களுக்கு தேவையான உதவி செய்து தரப்படும். பிஜே மருத்துவ கல்லூரி விடுதியை கட்டுவதற்கு தேவையான உதவியையும் செய்வோம் என தெரிவித்து உள்ளார்.
உயிர் பிழைத்த அதிசயம்
இத்தனை பேர் உயிரிழந்த இந்த விமான விபத்தில், ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. 38 வயதான நபர் ஒருவர் உயிர் தப்பினார். ரமேஷ் விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.
டிஎன்ஏ பரிசோதனை
உயிரிழந்தவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
போயிங் கருத்து
இந்த விபத்து தொடர்பாக போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ' ஏர் இந்தியா நிறுவனத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறேம். உதவ தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்து உள்ளது.
உதவ தயார்
விபத்து தொடர்பாக இந்திய விமான விபத்து புலனாய்வு குழுவுக்கு உதவ தயாராக உள்ளதாக பிரிட்டன் விமான விபத்து குறித்த விசாரணை பிரிவினர் தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் பயணிகளும் இறந்துள்ளதால், இந்த உதவியை அவ்கள் செய்ய முன்வந்துள்ளனர். இதற்கான குழுவை அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
எல்லாம் அவன் செயல்!
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் செல்ல வேண்டி பூமி சவுகான் என்ற பெண் பயணி, வெறும் 10 நிமிடங்களில் விமானத்தை தவறவிட்டார். அகமதாபாத் போக்குவரத்து நெரிசலால் தாமதமானதால் உயிர் தப்பியுள்ளார். தெய்வீக பலமே தனது உயிரைக் காப்பாற்றியதாக பூமி சவுகான் தெரிவித்து உள்ளார்.
சிஇஓ வருத்தம்
ஏர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கேம்ப்பெல் வில்சன் கூறியதாவது: விமான விபத்து சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏர் இந்தியாவில் அனைவருக்கும் இன்றைய நாள் மிகவும் கடினமான நாள். தற்போது, பயணிகள், ஊழியர்கள், குடும்பத்தினருக்கு உதவுவதில் தான் எங்களின் கவனம் உள்ளது. நிறைய கேள்விகள் உள்ளன. ஆனால், அவற்றுக்கு தற்போது பதில்அளிக்க முடியாது. அனைத்து அவசர கால மீட்பு படையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். விசாரணை நடக்க காலம் எடுக்கும். தற்போது எங்களால் செய்ய முடிந்ததை நாங்கள் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.