நாளை பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி
நாளை பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி
நாளை பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி
UPDATED : ஜூன் 08, 2024 12:56 AM
ADDED : ஜூன் 07, 2024 11:24 PM

தேசிய ஜனநாயக கூட்டணியின் பார்லிமென்ட் குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, ஜனாதிபதியை சந்தித்தார். ஆட்சி அமைக்கும்படி ஜனாதிபதி முர்மு அழைப்பு விடுத்தார். நாளை இரவு 7:15 மணிக்கு மூன்றாவது முறையாக மோடி பிரதமர் பதவி ஏற்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள், கட்சி தலைவர்களின் கூட்டம், பழைய பார்லி மென்ட் வளாகத்தில் உள்ள மைய மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.
பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே, சிராக் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி, அனுப்ரியா படேல், பவன் கல்யாண், குமாரசாமி, அஜித் பவார் பங்கேற்றனர்.
மோடி வரும்போது, தலைவர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.


வணங்கிய பிரதமர்
இருக்கைகளின் அருகே ஒரு மேடை அமைத்து, அதில் அரசியலமைப்பு சட்டத்தின் மிகப்பெரிய புத்தகம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
மைய மண்டபத்திற்குள் நுழைந்ததும் நேராக அங்கு சென்று, அந்த புத்தகத்தை எடுத்து சில வினாடிகள் தன் நெற்றியில் வைத்து வணங்கி விட்டு, அதன்பிறகே தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தார் பிரதமர் மோடி.
பின், தே.ஜ., கூட்டணியின் பார்லிமென்ட் குழு தலைவராக மோடியின் பெயரை நட்டா முன்மொழிந்தார். அனைத்து தலைவர்களும் வழிமொழிந்து மோடியை பாராட்டி பேசினர். மோடி ஏற்புரை நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது:
சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை உயர்த்த தே.ஜ., கூட்டணி அரசு அடுத்த 10 ஆண்டுகளில் கவனம் செலுத்தும். பரஸ்பர நம்பிக்கை என்பதே கூட்டணியின் மையப்புள்ளி. அனைவரும் சமம் என்ற கொள்கையுடன் செயல்படுவோம்.
கூட்டணி வரலாற்றில், எண்ணிக்கை அடிப்படையில் இதுதான் பலம் வாய்ந்த கூட்டணி அரசு. இது எப்போதும் தோற்காது. எங்கள் வெற்றியை ஏற்காமல், அதன் மீது தோல்வியின் நிழலை போர்த்த முயற்சி செய்தனர்; அது பலன் அளிக்கவில்லை.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கு சல்யூட்.
தேர்தலுக்காக திரண்டது இண்டியா கூட்டணி. அதன் தலைவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். இது அவர்களின் பதவி ஆசையை வெளிப்படுத்தியது. 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் உயிருடன் உள்ளதா' என கேட்டனர். ஆனால், ஜூன் 4ல் அமைதியாகி விட்டனர். இந்திய ஜனநாயகம், அவர்களை அமைதியாக்கி விட்டது.
எட்ட முடியாது
கடந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் ஜெயித்த மொத்த தொகுதிகளை காட்டிலும், இந்த ஒரு தேர்தலில் பா.ஜ., பெற்ற தொகுதிகள் அதிகம். இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் 100 தொகுதிகளை காங்கிரசால் எட்ட முடியாது.
அவர்களை போல பதவிக்காக சேர்ந்தது அல்ல தே.ஜ., கூட்டணி. தேசத்திற்காக இணைந்த கூட்டணி. இயற்கையான கூட்டணி. இதில் கட்சிகளுக்கு இடையே உறுதியான பந்தம் உள்ளது. புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா, லட்சிய இந்தியா. அதுதான் என்.டி.ஏ.
கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்தது 'டிரைலர்' தான். இனி இன்னும் கடினமாக, வேகமாக உழைப்போம். நாங்கள் சொல்வதை செய்வோம் என்பதை மக்கள் அறிவர். எனவே, எதிர்க்கட்சிகளும் எங்களுடன் இணைந்து பணியாற்றி, நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தருவர் என நம்புகிறேன்.
நல்லாட்சியே இலக்கு
கேரளாவில் முதல் முறையாக கணக்கை துவக்கி உள்ளோம். அருணாச்சல பிரதேசம், ஒடிசாவில் பெரிய வெற்றி பெற்றுள்ளோம். ஆந்திராவில் வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் வெற்றி பெறாவிட்டாலும், ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. அதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
நாடு உச்சம் தொடுவதற்காக 10 ஆண்டுகள் உழைத்தோம். நல்லாட்சி என்பதே நம் இலக்கு. நம் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நல்லாட்சி அளித்துள்ளனர். அவர்கள் இணைந்திருப்பதால் நல்லாட்சியின் அர்த்தமாக தே.ஜ., கூட்டணி விளங்குகிறது.இவ்வாறு மோடி பேசினார்.
மக்களுக்கு நன்றி
கூட்டம் முடிந்த பின் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாயுடு, நிதீஷ், ஷிண்டே உடன் சென்றனர். ஆட்சி அமைக்குமாறு மோடிக்கு முர்மு அழைப்பு விடுத்தார்.
இன்று அமைச்சர்கள் பட்டியல் தருவதாக மோடி தெரிவித்தார். ஞாயிறு பதவி ஏற்க சம்மதம் தெரிவித்தார்.
நாளை இரவு 7:15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் பேட்டி அளித்த மோடி, ''தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. கூடுதல் உற்சாகத்துடன் பணியாற்றுவோம். நிலையான, வலுவான ஆட்சியை தருவோம். புதிய சரித்திரத்தை எழுதுவோம்,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -