ஹாவர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை
ஹாவர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை
ஹாவர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை
ADDED : மே 24, 2025 04:33 AM

நியூயார்க் : அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலையில் மாணவர், பார்வையாளர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் சேர்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 100 நாடுகளில் இருந்து, 6,800 மாணவர்கள் வரை இங்கு கல்வி பயில சேர்கின்றனர்.
இதில், 500 - 800 வரை இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் சேர்வதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. நடப்பு கல்வியாண்டில், 788 இந்திய மாணவர்கள் ஹாவர்டில் கல்வி பயில்கின்றனர்.
இஸ்ரேல் - காசா போரின் போது, ஹாவர்ட் பல்கலை மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.
பல்கலை வளாகத்திற்குள் போராட்டம் நடத்த தடை விதிக்கும்படி அதிபர் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதை ஹாவர்ட் நிர்வாகம் ஏற்க மறுத்தது. இதனால், ஆத்திரம் அடைந்த டிரம்ப் பல்கலைக்கான, 17,200 கோடி ரூபாய் மானியத்தை நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில், ஹாவர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு உடனடி தடை விதிப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை நேற்று அதிரடியாக அறிவித்தது.
எனவே, அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைகளுக்கு மாற வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் மாணவர்களுக்கான அங்கீகாரத்தை இழக்க நேரிடும். அதன் காரணமாக, அவர்கள் உடனடியாக அமெரிக்காவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.
இந்த திடீர் உத்தரவு, ஹாவர்டில் படிக்கும் 10,158 வெளிநாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதற்கிடையே டிரம்ப் அரசின் இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.