Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ முன்னாள் முதல்வர் ரூபானி உடல் மரபணுவால் அடையாளம் தெரிந்தது

முன்னாள் முதல்வர் ரூபானி உடல் மரபணுவால் அடையாளம் தெரிந்தது

முன்னாள் முதல்வர் ரூபானி உடல் மரபணுவால் அடையாளம் தெரிந்தது

முன்னாள் முதல்வர் ரூபானி உடல் மரபணுவால் அடையாளம் தெரிந்தது

ADDED : ஜூன் 16, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
ஆமதாபாத்: குஜராத்தில் விமான விபத்தில் உயிரிழந்த, அம்மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 47 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, 242 பேருடன் கடந்த 12ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்து சிதறியது.

டி.என்.ஏ., பரிசோதனை


இதில், ஒரேயொரு பயணி தவிர, விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.

இதைத் தவிர, விமானம் நொறுங்கி விழுந்த மருத்துவக் கல்லுாரி விடுதியில் இருந்த, 29 மாணவர்களும் உயிரிழந்தனர். இதன் காரணமாக, பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரித்தது.

இந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் ரூபானி, 68, உயிரிழந்தார். இந்நிலையில், பலியானோரின் உடல்களை, டி.என்.ஏ., பரிசோதனை வாயிலாக அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், விஜய் ரூபானி உட்பட 47 பேரின் உடல்கள் டி.என்.ஏ., பரிசோதனை வாயிலாக நேற்று அடையாளம் காணப்பட்டன.

இது குறித்து, குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல், டி.என்.ஏ., பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டது.

இதுபற்றி முதல்வர் பூபேந்திர படேல், விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் விபத்தில் இறந்தவர்களில் மேலும் 46 பேரின் உடல்கள், டி.என்.ஏ., வாயிலாக அடையாளம் காணப்பட்டன.

இதில், 24 பேரின் உடல்கள், அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. உயிரிழந்த மற்றவர்களின் உடல்களையும் அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இறுதி சடங்கு


விஜய் ரூபானியின் உடல், ஆமதாபாதில் இருந்து ராஜ்கோட்டிற்கு தனி விமானம் வாயிலாக எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கு, அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக விஜய் ரூபானி, லண்டனில் உள்ள மனைவி மற்றும் மகளை காண, கடந்த மாதம் 19ம் தேதி செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அதை ரத்து செய்து, இம்மாதம் 5ம் தேதி செல்ல முடிவு செய்தார்.

அப்பயணத்தையும் ரத்து செய்த அவர், இறுதியில் கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us