துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ஒப்படைப்பு
துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ஒப்படைப்பு
துவாரபாலகர் தங்க கவசம்: சபரிமலையில் ஒப்படைப்பு
ADDED : செப் 22, 2025 06:51 AM

பத்தினம்திட்டா; சபரிமலை துவார பாலகர்கள் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க கவசங்கள் பழுதுபார்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதன் எடை 4 கிலோ வரை குறைந்தது தெரியவந்ததால், நேற்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அய்யப்பனை தரிசிக்கின்றனர்.
கோவில் கருவறைக்கு முன்பாக இருக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு, 1999ம் ஆண்டில் தங்க கவசம் சார்த்தப்பட்டது. இது சேதமடைந்ததால், 2019ல், அவற்றை அகற்றி சென்னைக்கு அனுப்பினர்.
துவாரபாலகர் சிலையில் இருந்த தங்க கவசங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால், சென்னையில் இருந்து அதை மீண்டும் கொண்டு வருமாறு சமீபத்தில் கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
அப்போது நடத்தப்பட்ட சோதனையில், தங்க கவசத்தின் எடை 42.8 கிலோவில் இருந்து 38.2 கிலோவாக குறைந்திருப்பது தெரிந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்பு துறை இது தொடர்பான விசாரணையை துவக்கி உள்ளது. இதற்காக தங்க கவசங்கள் நேற்று சபரிமலை கோவிலுக்கு திரும்ப கொண்டு வரப்பட்டன.