Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சபரிமலையில் பக்தர்கள் நிற்கும் பாலத்தை அகற்ற முடிவு: ரூ.376 கோடியில் திட்டங்கள்

சபரிமலையில் பக்தர்கள் நிற்கும் பாலத்தை அகற்ற முடிவு: ரூ.376 கோடியில் திட்டங்கள்

சபரிமலையில் பக்தர்கள் நிற்கும் பாலத்தை அகற்ற முடிவு: ரூ.376 கோடியில் திட்டங்கள்

சபரிமலையில் பக்தர்கள் நிற்கும் பாலத்தை அகற்ற முடிவு: ரூ.376 கோடியில் திட்டங்கள்

UPDATED : ஜன 06, 2024 08:00 AMADDED : ஜன 05, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
சபரிமலை: சபரிமலை பக்தர்கள் வசதிக்காக சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில், 376 கோடி ரூபாய் செலவில், ஆறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

பம்பை ஹில்டாப்பில் இருந்து கணபதி கோவிலுக்கு, 32.9 கோடி ரூபாய் செலவில், 12 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்படுகிறது. சன்னிதியில் மேல் சாந்தி மற்றும் தந்திரி அறைகள் தற்போதுள்ள இடத்திலிருந்து மாற்றப்பட உள்ளன.

18 படி ஏறியதும் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் மேல் பாலம் அகற்றப்படும். இதற்காக, 90 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். சன்னிதி பின்புறம் ராணுவம் அமைத்த பெய்லி பாலத்திற்கு பதிலாக, 70 கோடி ரூபாயில் புதிய பாலம் அமைக்கப்படும்.

இவை உட்பட பல பணிகள், சபரிமலை மாஸ்டர் பிளான் கமிட்டி மேற்பார்வையில் நடைபெற உள்ளன. ஏப்ரலில் துவங்க உள்ள இந்த பணி, அரசு மானியம் மற்றும் நன்கொடையாளர்கள் வாயிலாக செய்து முடிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், சபரிமலையில், 'திருப்பதி மாடல்' என்ற திட்டத்தை அரசு அறிவித்து, 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அதற்கான எந்த ஏற்பாடுகளும் இங்கு செய்யப்படவில்லை. மண்டல காலத்தில் பக்தர்கள் வேதனையுடனும், கண்ணீருடனும் 18 மணி நேரம் காத்திருந்தும், அய்யப்பனை பார்க்க முடியாமல் திரும்பி சென்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்தன.

ஒரு நாளில் எத்தனை பக்தர்களை அனுமதிக்க முடியும் என்ற கணக்கில்லாத தேவசம்போர்டு, தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனம் என, சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு பக்தர்கள் 14 - 16 மணி நேரம் நிற்கின்றனர். அளவுக்கு அதிகமான கூட்டம் வந்ததால், பம்பையில் பக்தர்கள் தடுக்கப்படுகின்றனர்.

வாகனங்கள் பழைய படி, மீண்டும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவு, இந்த ஆண்டு மட்டும் இப்பிரச்னை உள்ளதற்கு கேரளா அரசு அல்லது தேவசம் போர்டு விளக்கம் அளிக்கவில்லை.

நீண்ட நேர காத்திருப்புக்கு பின், 18 படி ஏறி தரிசனத்திற்கு சென்ற தஞ்சாவூர் பக்தர் தயானந்த், 24, என்பவரை போலீசார் தாக்கிய சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது. இவர் கோவில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏராளமானோர் திரும்பும் அவலம்

நீண்ட காத்திருப்பு, துாக்கமின்மை காரணமாக தரிசனம் முடிந்த பக்தர்கள், உடனடியாக பம்பை திரும்புவதற்கு பதில், சன்னிதி அருகிலேயே துாங்குவதால் நெரிசல் காணப்படுகிறது. நேற்று முன்தினம் காலை, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட, 15 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர், நேற்று மதியம் வரையிலும் சன்னிதானம் அருகே செல்ல முடியாததால், இந்த குழுவை சேர்ந்த சிலர் தரிசனம் செய்யாமல் திரும்பினர்.

சிலர் தங்கள் இரு முடியை, பிற பக்தர்களிடம் கெஞ்சி கூத்தாடி, அபிஷேகம் செய்யும்படி கூறி விட்டு திரும்புகின்றனர். இதுபோல, ஏராளமானோர், இரவு, பகலாக காத்திருந்தும் கோவிலை அடைய முடியாததால், பாதியிலேயே திரும்புகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us