பயங்கரவாதியை உருவாக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி உரை
பயங்கரவாதியை உருவாக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி உரை
பயங்கரவாதியை உருவாக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும்: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி உரை
ADDED : ஜூலை 04, 2024 03:55 PM

புதுடில்லி: ‛‛ பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடுகளை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும்'' என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு( எஸ்சிஓ) மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
கஜகஸ்தானின் அஸ்தானா நகரில், எஸ்சிஓ மாநாடு நடந்து வருகிறது. இம்மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் பிரதமர் மோடியின் அறிக்கையை ஜெய்சங்கர் வாசித்தார்.
ஒருமைப்பாடு
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த நேரத்தில், ஒரு நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, சமத்துவம், பரஸ்பர பலன்கள், உள்விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல், பலத்தை பயன்படுத்தாமை அல்லது பலத்தை காட்டி அச்சுறுத்தாமல் இருப்பது ஆகியவையே, நமது வெளியுறவு கொள்கையின் அடிப்படையாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று ஒப்புக் கொண்டுள்ளோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எஸ்சிஓ அமைப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பயங்கரவாதம் எல்லை தாண்டி உருவானாலும், அதனால் பல நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பயங்கரவாதத்தை நாம் கவனிக்காவிட்டால், அது சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும்.
பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள், பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடுகளை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கடுமையான பதிலடி கொடுப்பதுடன், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி மற்றும் ஆட்கள் தேர்வு செய்வதை தடுக்க வேண்டும். இளைஞர்கள் மத்தியில் பிரிவினைவாத கொள்கைகள் பரவுவதை தடுக்க வேண்டும்.
பருவநிலை மாற்றம்
நம்முன் உள்ள மற்றொரு சவால் பருவ நிலை மாற்றம். மாற்று எரிபொருளுக்கு மாறுவது, மின்சார வாகனங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் காலநிலை எதிர்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவற்றில் தீவிரமாக உழைத்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.