பயங்கரவாதிகளோடு எம்.பி.,க்களை ஒப்பிடுவதா?: காங்கிரஸ் விமர்சனத்துக்கு பா.ஜ., எதிர்ப்பு
பயங்கரவாதிகளோடு எம்.பி.,க்களை ஒப்பிடுவதா?: காங்கிரஸ் விமர்சனத்துக்கு பா.ஜ., எதிர்ப்பு
பயங்கரவாதிகளோடு எம்.பி.,க்களை ஒப்பிடுவதா?: காங்கிரஸ் விமர்சனத்துக்கு பா.ஜ., எதிர்ப்பு

'நம் எம்.பி.,க்கள் உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கின்றனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இங்கு சுற்றிக் கொண்டிருக்கின்றனர்,'' என, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ., 'இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு விளக்கி வரும் எம்.பி.,க்களையும், பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் இணைத்து பேசுவது கொடூரமான ஒப்பீடு' என்று தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வாயிலாக, நம் ராணுவம் பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையை சர்வதேச நாடுகளிடம் அம்பலப்படுத்துவதற்காக, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
ஒரு மாதம்
இந்நிலையில், காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: கடந்த ஏப்., 22ல் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் வெளியில் சுற்றுகின்றனர்.
கடந்த 2023 டிசம்பரில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 2024 அக்டோபரில் கந்தேர்பால் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதே மாதம் மற்றொரு பயங்கரவாத தாக்குதலும் நடந்தது. இந்த அனைத்தையுமே, ஒரு பயங்கரவாத அமைப்பு தான் நடத்தியுள்ளது.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தான், கடந்த 18 மாதங்களில் நடந்த நான்கு தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர் என்று தெரிகிறது. ஆனாலும், இன்னும் கைது செய்யப்படாமல் அவர்கள் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். நம் எம்.பி., க்கள் உலகத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளோ, இங்கு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்.
நாங்கள் எங்கள் கேள்விகளை மிக தீவிரமாக கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அரசு தரப்போ, எங்கள் கேள்விகளுக்கு எந்த பதிலையும் தராமல் உள்ளது. மாறாக, காங்கிரசை குறிவைத்துதான் பா.ஜ., செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கூறியிருப்பதற்கு பதிலடி தரும் விதமாக, பா.ஜ., செய்தி தொடர்பாளர் ெஷஷத் பூனாவாலா கூறியிருப்பதாவது:
மிக மிக கொடூரமான ஒப்பீட்டை ஜெய்ராம் ரமேஷ் செய்துள்ளார். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை சர்வதேச நாடுகள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காகவே நம் எம்.பி.,க்கள் சென்றுள்ளனர். அவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது கண்டிக்கத் தக்கது.
'சர்ஜிக்கல் ஸ்டிரைக்'
நம் ராணுவ தளபதியை தெரு ரவுடி என்றது, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதலை ரத்த வியாபாரம் என்றது, ஆப்பரேஷன் சிந்துார் என்பது ஒரு சிறு நடவடிக்கை என கூறியது உட்பட பலமுறை, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் காங்கிரஸ் அவதுாறாக கருத்து தெரிவித்து வருகிறது.
தற்போது சர்வதேச அளவிலான நடவடிக்கைளை இந்தியா எடுக்கும்போது, அதிலிருந்து பாகிஸ்தானை காப்பாற்றுவதற்காக நம் எம்.பி.,க்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பீடு செய்கிறது காங்கிரஸ். இதன் வாயிலாக அனைத்து எல்லைகளையும் காங்கிரஸ் மீறியுள்ளது. இதுதான் காங்கிரசின் மனநிலை என்றபோதும், இதுகுறித்து பார்லிமென்ட் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்
- நமது டில்லி நிருபர் -