பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
ADDED : ஜூன் 28, 2025 08:24 AM

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகித்த, பா.ஜ.,வை சேர்ந்த அமைச்சர் சாய் சரவணன்குமார் மற்றும் மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.
புதுச்சேரியில் என்.ஆர்., காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்.ஆர்., காங்., சார்பில் 10 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இதில் முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.
பா.ஜ., சார்பில் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இதில் சபாநாயகராக செல்வம், உள்துறை அமைச்சராக நமச்சிவாயம், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக சாய் சரவணன் குமார், முதல்வரின் பார்லிமென்ட் செயலராக ஜான்குமார் ஆகியோர் பதவியில் உள்ளனர்.
மேலும் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவதற்காக மாநில தலைவர் முதல், அனைத்து அணி தலைவர் பதவிகள் மாற்றி அமைத்து வருகிறது. இந்நிலையில், நேற்று புதுச்சேரிக்கு வந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார்.
அப்போது அவர், 'புதுச்சேரி பா.ஜ., வளர்சிக்காக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரும் பல முடிவுகள் எடுத்துள்ளனர். அமைச்சர் சாய்சரவணன், நியமன எம்.எல்.ஏ.,க்கள் கட்சி பணிக்கு திரும்ப வேண்டும். அதற்கு, அமைச்சர் சாய்சரவணன் குமார் அமைச்சர் பதவியையும் மற்ற மூவரும் தங்கள் எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவர்களுக்கு பதிலாக புதிதாக அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்படுவர்' என கூறியதாக தெரிகிறது. அதை தொடர்ந்து, நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் தனியாகவும், அமைச்சர் சாய்சரவணன் குமார் தனது நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினர். பின், நான்கு பேரும், அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ., பதவிகளை, ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
அதை தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு அமைச்சர் சாய்சரவணன் குமார் சட்டசபைக்கு சென்று, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, தன் அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட முதல்வர், கவர்னர் கைலாஷ்நாதனுக்கு அனுப்பினார். அதேபோல, மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்களும் தங்களது ராஜினமா கடித்தை சபாநாயகர் செல்வத்திடம் அளித்தனர். இந்த ராஜினாமா கடிதங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.