நுாற்றாண்டின் மிகப்பெரிய 'இன்சூரன்ஸ் கிளைம்'; ரூ.1,000 கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு
நுாற்றாண்டின் மிகப்பெரிய 'இன்சூரன்ஸ் கிளைம்'; ரூ.1,000 கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு
நுாற்றாண்டின் மிகப்பெரிய 'இன்சூரன்ஸ் கிளைம்'; ரூ.1,000 கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு

புதுடில்லி: குஜராத்தில் ஏற்பட்ட, 'ஏர் இந்தியா' விமான விபத்து, நம் நாட்டின் விமான வரலாற்றிலேயே மிகப்பெரிய இன்சூரன்ஸ் கிளைமை பதிவு செய்யும் என, தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்காக ஏர் இந்தியா, 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் என, தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் விபத்துக்குள்ளான விமானம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானது. தற்போது, இது டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
காப்பீடு
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை அளிக்கப்படும் என, டாடா குழுமம் அறிவித்துள்ளது. இந்த விமானம், 2013ம் ஆண்டின் போயிங் 787 மாடல் ஆகும். இது, 2021ல் 115 மில்லியன் அமெரிக்க டாலருக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் தற்போதைய மதிப்பு 978 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் மான்ட்ரில் ஒப்பந்தம் - 1999ன் படி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு பயணிக்கும் தலா 1.47 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, மருத்துவ கல்லுாரி விடுதியில் விமானம் மோதியதில், பலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக, ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுஉள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, விமான விபத்தில் உயிரிழந்தாலோ அல்லது காயமடைந்தாலோ இழப்பீடு வழங்க சிறப்பு உரிமைகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தற்போதைய கணக்கின்படி பயணி ஒருவருக்கு அதிகபட்சம் 1.78 கோடி ரூபாய் வரை வழங்க முடியும்.
ஒப்பந்தம்
அப்போது, விபத்தில் இறந்தோரின் வயது, படிப்பு உள்ளிட்ட காரணிகளும் கருத்தில் கொள்ளப்படும். ஏர் இந்தியா, ஆண்டுதோறும் 300 விமானங்களுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த பாலிசி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 அன்று புதுப்பிக்கப்படுகிறது.
தற்போது விபத்துக்குள்ளான ட்ரீம்லைனர் விமானம் ஒன்றிற்கு, அதிகபட்சமாக 2,380 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் செய்துள்ளது. ஏர் இந்தியா, உள்நாடு மட்டுமின்றி சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளது. எனவே, அனைத்து தரப்பும் இணைந்தே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கும்.
இவ்விமான விபத்தில், இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகையாக 1,000 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல் கேரளாவின் கோழிக்கோடு விமான விபத்தில், 585 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கிளைம் செய்ததே அதிகபட்சமாக உள்ளது.