Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஜாதி பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை; உ.பி.,யில் சாட்டையை சுழற்றியது யோகி அரசு

ஜாதி பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை; உ.பி.,யில் சாட்டையை சுழற்றியது யோகி அரசு

ஜாதி பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை; உ.பி.,யில் சாட்டையை சுழற்றியது யோகி அரசு

ஜாதி பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை; உ.பி.,யில் சாட்டையை சுழற்றியது யோகி அரசு

ADDED : செப் 23, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஜாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக் கூட்டங்கள் நடத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், போலீஸ் பதிவேடுகளில் ஜாதி தொடர்புடைய குறிப்புகளை பதிவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது அமைதி மற்றும் தேசிய ஒற்றுமைக்கு இவை அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக மு தல்வர் யோகி ஆதித்ய நாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வரிசையில், ஜாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து கலெக்டர்கள், செயலர்கள், போலீஸ் துறை தலைவர்கள் ஆகியோருக்கு தலைமை செயலர் தீபக் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 10 முக்கியமான அம்சங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஜாதி பாகுபாடுகளை களைய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களில் ஜாதி பெயர்கள், வாசகங்கள் அல்லது ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால், 1988 மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொடர்புடைய வழக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

உ.பி., அரசின் இந்த உத்தரவு, அரசியல் கட்சிகளை அதிர வைத்திருக்கிறது. குறிப்பாக 2027ல் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அரசின் இந்த உத்தரவு, ஜாதி அடிப்படையில் மக்களை அணுகுவதற்கு முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தேர்தல் பிரசாரங்களின் போது ஆளும் பா.ஜ., கூட தடுமாறக் கூடும் என கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: போலீஸ் ஆவணங்களில் இருந்து ஜாதி குறித்த பதிவுகள் நீக்கப்பட வேண்டும் கைது செய்வது, தேடுதல் உத்தரவு உட்பட எந்தவொரு போலீஸ் ஆவணங்களிலும் ஜாதி குறிப்பிடக்கூடாது

போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள நோட்டீஸ் பலகைகளிலும் ஜாதி பெயர் இடம் பெறக் கூடாது

சி.சி.டி.என்.எஸ்., எனப்படும், 'மாநில குற்றம் மற்றும் குற்றவாளிகள் டிராக்கிங் நெட்வொர்க் மற்றும் சிஸ்டம்ஸ்' தளத்திலும், ஜாதி என்ற பகுதி இருந்தால், அதை நீக்கி புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில், அந்த பகுதியை நிரப்பாமல் விட்டு விட வேண்டும்

கைது செய்யப்படும் குற்றவாளியின் தந்தை, தாய் பெயர் இடம் பெறலாம். ஆனால், வழக்கு குறிப்புகளில் ஜாதி பெயர் இடம் பெறக் கூடாது

ஜாதி அடையாளத்தை பெருமைப்படுத்தும் பதாகைகள் எங்கும் இருக்கக் கூடாது. நகரங்கள், கிராமங்களில் அப்படியான பதாகைகள் வைக்கப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்

குறிப்பிட்ட ஜாதியினர் நிறைந்த பகுதி என எந்த இடத்தையும் அடையாளப்படுத்தக் கூடாது

ஜாதி அடிப்படையிலான பேரணிகள், பொது நிகழ்வுகள், மாநிலம் தழுவிய அளவில் தடை செய்யப்படுகின்றன

சமூக ஊடகங்களிலும் ஜாதியை பெருமைப்படுத்தும் அல்லது வெறுப்புணர்வை துாண்டும் எந்த பதிவும் இடம் பெறக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

'ஆன்லைன்' மூலம் ஜாதி அடிப்படையில் பகையை துாண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்

இந்த உத்தரவு உடனடியாக கடைப்பிடிக்கப்படுவதை உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அரசின் புதிய கொள்கை குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்த, பயிற்சி பெற்ற அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூகத்தில் புரையோடி போயிருக்கும் ஜாதி பாகுபாடுகளை நீக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 16ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து, பொது அமைதி மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டும் வகையில், யோகி ஆதித்யநாத் அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us