வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகர் மறைவு
வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகர் மறைவு
வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகர் மறைவு
ADDED : மே 22, 2025 02:51 AM

புனே: இந்திய வான் அறிவியல் துறையில் முக்கிய பங்காற்றிய, வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நார்லிகர், 87, காலமானார். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஜெயந்த் நார்லிகர், 1938ல் பிறந்தார். பனாரஸ் ஹிந்து பல்கலை மற்றும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர்.
வான் இயற்பியல் துறையின், அண்டவியல் பிரிவில் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை.
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் 1972 -- 89 வரை பணியாற்றியபோது, அங்குள்ள வான் இயற்பியல் பிரிவு, சர்வதேச அந்தஸ்தை பெற்றது.
யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழுவின், வானியல், வான் இயற்பியல் நிறுவனங்களுக்கான மையத்தின் இயக்குநராக 15 ஆண்டுகள் பணியாற்றி, அதை சர்வதேச அளவில் சிறந்ததாக உயர்த்தினார்.
அறிவியல் ஆராய்ச்சி தவிர, கட்டுரைகள், அறிவியல் புனைவு கதைகள், புத்தகங்கள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிரபலமானவர். அவரது அறிவியல் படைப்புகளுக்காக, யுனெஸ்கோவால் 'கலிங்கா விருது' வழங்கப்பட்டது.
நம் நாட்டில் மிக இளம்வயதில், அதாவது 26 வயதில், 'பத்மபூஷண்' விருது பெற்றவர், ஜெயந்த் நார்லிகர். பின்னர், 2004ல் 'பத்ம விபூஷண்' விருது பெற்றார்.
மராத்தியில் எழுதப்பட்ட இவருடைய சுயசரிதை புத்தகத்துக்கு, 2014ல் 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்தது. புனேயில் வசித்து வந்த இவருக்கு சமீபத்தில் இடுப்பு அறுவை சிகிச்சை நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் உறக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.