வி.ஐ.பி.,க்களுக்காக மட்டும் நடைபாதை கடையை அகற்றுவதா
வி.ஐ.பி.,க்களுக்காக மட்டும் நடைபாதை கடையை அகற்றுவதா
வி.ஐ.பி.,க்களுக்காக மட்டும் நடைபாதை கடையை அகற்றுவதா
UPDATED : ஜூன் 24, 2024 08:50 PM
ADDED : ஜூன் 24, 2024 08:37 PM

மும்பை : 'வி.ஐ.பி.,க்கள் வரும்போது மட்டும் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்போது, மற்றவர்களுக்காக ஏன் செய்யக் கூடாது' என, மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நடைபாதைகள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்படும் பிரச்னை தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற அமர்வு, மாநில அரசு வழக்கறிஞரிடம் கூறியுள்ளதாவது:பிரதமர் அல்லது பிற வி.ஐ.பி.,க்கள் வரும்போது, நடைபாதை கடைகளை அகற்றுகிறீர்கள். ஆனால் அதன்பின், அவை மீண்டும் முளைத்து விடுகின்றன. ஒரு நாள் செய்யும் இந்த நடவடிக்கையை ஏன் தொடர்ந்து செய்யக் கூடாது.
நடைபாதை நடப்பதற்கே; அதில்தான் நடந்து செல்ல வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறோம். ஆனால், நடைபாதைகளே இருப்பதில்லை.இருக்கும் நடைபாதைகளும் முழுதுமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன.சாலைகளும், நடைபாதைகளும் தனிமனித உரிமையாகும். அதை அனைத்து தரப்பினரும் உரிய முறையில் பயன்படுத்த வாய்ப்பு தரப்பட வேண்டும்.
ஆனால், தற்போது, எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அபராதம் விதிப்பதால், இதில் தீர்வு காண முடியாது. உங்களுடைய அபராதத்தைவிட அதிகளவில் அவர்கள் சம்பாதிக்கின்றனர்.இதில் உறுதியான, தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.