திருமணம் செய்ததால் மட்டுமே கணவர் மனைவியின் உரிமையாளராக முடியாது; அலகாபாத் உயர் நீதிமன்றம்
திருமணம் செய்ததால் மட்டுமே கணவர் மனைவியின் உரிமையாளராக முடியாது; அலகாபாத் உயர் நீதிமன்றம்
திருமணம் செய்ததால் மட்டுமே கணவர் மனைவியின் உரிமையாளராக முடியாது; அலகாபாத் உயர் நீதிமன்றம்
ADDED : மார் 25, 2025 01:42 AM

பிரயாக்ராஜ்: 'ஒரு பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக, கணவர், அந்த பெண்ணின் உரிமைதாரராக முடியாது' என, வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த பிரதம்யாதவ் என்பவர், தன் மனைவியுடன் தனிமையில் இருந்தபோது, அந்த பெண்ணுக்கு தெரியாமல் எடுத்த வீடியோ காட்சிகளை, 'பேஸ்புக்' இணையதளத்தில் பதிவிட்டதுடன், தன் நெருங்கிய உறவினர்களுக்கும் அனுப்பினார்.
தனிப்பட்ட உரிமை
அதை அறிந்த அந்த பெண், தன் கணவர் மீது போலீசில் வழக்கு தொடர்ந்தார். தகவல் தொழில்நுட்ப சட்டம் - 67ன் கீழ், பிரதம்யாதவ் மீது வழக்கு தொடரப்பட்டது.
தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிரதம்யாதவ் வழக்கு தொடர்ந்தார். அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி வினோத் திவாகர் நேற்று பிறப்பித்த உத்தரவு:
ஒரு பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக, அந்த பெண்ணின் உரிமைதாரராக கணவர் ஆகி விட முடியாது. அந்த பெண்ணின் தனிப்பட்ட உரிமையை எந்த காரணம் கொண்டும், அந்த பெண் விட்டுக் கொடுக்கத் தேவையில்லை.
மனைவியுடன் வைத்திருந்த நெருக்கமானஉறவை படம் பிடித்து, பிறருக்கு காட்டியபோதே, திருமண சட்டத்தின் முக்கிய அம்சமான, திருமணத்தின் புனிதத்துவத்தை அந்த கணவர் காப்பாற்றவில்லை என்பது தெளிவாகிறது.
மனைவி என்பவர், கணவனின் விருப்பப்படி செயல்படக் கூடிய நபர் இல்லை. அந்த பெண்ணுக்கு என தனிப்பட்ட உரிமைகள், ஆசைகள் இருக்கும். அவை மதிக்கப்பட வேண்டும். எனவே, அவர் மீது தொடரப்பட்ட வழக்கு, தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.
அந்த வழக்கின் விசாரணை நடந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கணவரும், மனைவியும் எதிர்காலத்தில் சமாதானமாக செல்ல வாய்ப்பு உள்ளது; இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டவர்கள்.
'கணவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு - 67ன் கீழ் வழக்கு தொடர முடியாது. தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
பதிவிட்டது தவறு
ஆனால், அதை ஏற்க மறுத்த அரசு வழக்கறிஞர், 'சட்டப்படி திருமணம் செய்தார் என்பதற்காக, அந்த பெண்ணின் தனி உரிமையில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை இணையத்தில் பதிவிட்டது தவறு' என, வாதிட்டார்.