மனம் கவரும் மலைப்பாதை சுவரோவியம்; அட்டப்பாடி வருவோர் மகிழ்ச்சி
மனம் கவரும் மலைப்பாதை சுவரோவியம்; அட்டப்பாடி வருவோர் மகிழ்ச்சி
மனம் கவரும் மலைப்பாதை சுவரோவியம்; அட்டப்பாடி வருவோர் மகிழ்ச்சி
ADDED : மார் 25, 2025 09:20 PM

பாலக்காடு; அட்டப்பாடி மலைப்பாதையின் சுவரோவியங்கள், பயணியரின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ளது அட்டப்பாடி . மாநிலத்தில் அதிகளவில் பழங்குடியினர் வசிக்கும் வன எல்லை பகுதியான அட்டப்பாடியின், வாழ்க்கை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், மண்ணார்க்காடு - -அட்டப்பாடி கணவாயில் உள்ள மலைப்பாதையில் வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள் பயணியரின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
மண்ணார்க்காடு வனச்சரக அதிகாரி சுபைர் கூறியதாவது:
மண்ணார்க்காடு வனச்சரகத்தில், கணவாயில் உள்ள மலைப்பாதையை அழகுபடுத்துவதன் ஒரு பகுதியாக, வனத்துறையின் சார்பில், கடந்த பிப்ரவரி மாதம் 'எமது அட்டப்பாடி' என்ற தலைப்பில் திட்டம் துவங்கப்பட்டது.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை, கலை, விவசாயம், கலாசாரம் மற்றும் சுற்றுலா பகுதிகள் என, அனைத்தும் இந்த மலைப்பாதையில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்பை மையப்படுத்திய தகவல்களும் இந்த சுவரோவியங்களில் இடம் பெற்றுள்ளன.
தற்போது, திட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சுவரோவியங்களின் அரிய காட்சிகளை கண்டு ரசிக்க ஏராளமான பயணியர் மலைப்பாதைக்கு வருகின்றனர்.
20 அடி உயரமுள்ள ஒரு பாறையில், பறவைகள், செடிகள், பூக்கள், நீரூற்று போன்றவை வரைந்து, அப்பகுதியை 'செல்பி பாயின்ட்' ஆகவும் மாற்றி உள்ளோம்.
'நான் எனது இயற்கையை அழிக்கமாட்டேன்' என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த 'செல்பி பாயின்ட்'களின் நோக்க மாகும்.
பத்தாவது கொண்டை ஊசி வளைவில், 3,200 சதுரஅடியில் வரையப்பட்டுள்ள சுவரோவியம் அட்டப்பாடியின் அழகை ஆவணப்படுத்த போகிறது. மலைப்பாதையின் மேல்பகுதியான மந்தம்பொட்டி வரையில், பல்வேறு தன்னார்வு அமைப்பின் ஒத்துழைப்புடன் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இதுபோன்ற நடவடிக்கைகளால், அட்டப்பாடி கணவாய் பகுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.