மகளிர் ஊக்கத்தொகை வாங்கிய 2,289 மஹா., அரசு ஊழியர்கள்
மகளிர் ஊக்கத்தொகை வாங்கிய 2,289 மஹா., அரசு ஊழியர்கள்
மகளிர் ஊக்கத்தொகை வாங்கிய 2,289 மஹா., அரசு ஊழியர்கள்
ADDED : ஜூன் 01, 2025 03:33 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் மகளிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களில், 2,289 பேர் அரசு ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதற்கு முன், கடந்தாண்டு ஆகஸ்டில் மகளிர் ஊக்கத் தொகை திட்டத்தை மஹாயுதி கூட்டணி அரசு அறிவித்தது.
இதன்படி, 21 - 65 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு, மாதம், 1,500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அரசு பெண் ஊழியர்கள் இந்த ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேசியவாத காங்.,கைச் சேர்ந்த மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிதி தட்கரே, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
மகளிர் ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. இது ஒரு தொடர் நடவடிக்கை.
இவ்வாறு ஆய்வு செய்தபோது, 2,289 அரசு ஊழியர்கள், இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற்று வந்தது தெரியவந்துள்ளது.
தகுதியுள்ளவர்களுக்கே அரசின் திட்டப் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.