ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் ம.பி., நீதிபதி பா.ஜ.,வில் ஐக்கியம்
ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் ம.பி., நீதிபதி பா.ஜ.,வில் ஐக்கியம்
ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் ம.பி., நீதிபதி பா.ஜ.,வில் ஐக்கியம்
UPDATED : ஜூலை 14, 2024 08:17 PM
ADDED : ஜூலை 14, 2024 08:08 PM

போபால்: ம.பி., மாநில ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி ரோஹித் ஆர்யா ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் பா.ஜ.,வில் இணைந்தார்.
ம.பி., மாநில ஐகோர்ட்டின் இந்தூர் கிளையின் நீதிபதியாக பணியாற்றியவர் ரோஹித் ஆர்யா கடந்த ஏப்ரலில் பணி ஓய்வு பெற்றார். மூன்று மாதத்திற்குள்ளாக பா.ஜ,,வில் இணைந்துள்ளார்.
தலைநகர் போபாலில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். பின்னர் பா.ஜ.,வில் தன்னை இணைத்து கொண்டார். அவரை மாநில பொறுப்பாளர் ராகவேந்திரா சர்மா வரவேற்றார்.
முன்னதாக கடந்த 2020 ம் ஆண்டில் பெண்ணிற்கு எதிரான குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கிய விவகாரத்தில் ரோஹித் ஆர்யா குற்றம் சாட்டப்பட்டார். இவர் ஜாமின் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் நேரடியாக தலையிட்டது. தொடர்ந்து ஜாமினை ரத்து செய்தது. தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் ஜாமின் மனுக்களை கையாள்வது குறித்து கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்தது.
62 வயதான நீதிபதி ஆர்யா 1984-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். தொடர்ந்து 2003-ல் ம.பி.,ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2013-ல் மாநில ஐகோர்ட் நீதிபதியாகவும், 2015-ல் நிரந்தர நீதிபதியாகவும் பதவியேற்றார். 2024 ஏப்ரலில் ஓய்வு பெற்றார்.