Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'ஸ்பைஸ்ஜெட்' பெண் ஊழியர் சி.ஐ.எஸ்.எப்., வீரரை அறைந்தது ஏன்?

'ஸ்பைஸ்ஜெட்' பெண் ஊழியர் சி.ஐ.எஸ்.எப்., வீரரை அறைந்தது ஏன்?

'ஸ்பைஸ்ஜெட்' பெண் ஊழியர் சி.ஐ.எஸ்.எப்., வீரரை அறைந்தது ஏன்?

'ஸ்பைஸ்ஜெட்' பெண் ஊழியர் சி.ஐ.எஸ்.எப்., வீரரை அறைந்தது ஏன்?

ADDED : ஜூலை 13, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி எஸ்.ஐ.,யை கன்னத்தில் அறைந்ததற்காக, 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்தின் பெண் ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில், பாலியல் தொந்தரவு தந்ததால் பெண் ஊழியர் அறைந்ததாக, ஸ்பைஸ்ஜெட் விளக்கம் அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிலைய பணியாளராக இருப்பவர் அனுராதா ராணி.

விமானங்களுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை கொண்டு சேர்ப்பது இவருடைய பணி. இவருக்கு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் அனுமதி அட்டை வழங்கியிருந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, உணவு வாகனங்களுடன், அனுராதா ஜெய்ப்பூர் விமான நிலையத்தின் வாயிலுக்கு வந்தார்.

அவரை பரிசோதனை செய்ய பெண் சி.ஐ.எஸ்.எப்., ஊழியர் இல்லாததால், வேறு நுழைவாயில் வழியாக வருமாறு கூறியுள்ளனர். அதை ஏற்க மறுத்து சி.ஐ.எஸ்.எப்., போலீசாருடன் அனுராதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், அங்கிருந்த உதவி எஸ்.ஐ., கிரிராஜ் பிரசாத்தை கன்னத்தில் பளாரென்று அறைந்தார்.

இதையடுத்து கிரிராஜ் சிங் தந்த புகாரின் அடிப்படையில், ஜெய்ப்பூர் போலீசார் அனுராதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஸ்பைஸ்ஜெட் உணவு வாகனத்துடன் சென்ற பெண் பணியாளர் அனுராதா ராணியிடம், உரிய விமான நிலைய நுழைவு அட்டை இருந்த போதும், சி.ஐ.எஸ்.எப்., உதவி எஸ்.ஐ., கிரிராஜ் பிரசாத், தகாத வார்த்தைகளை பேசியுள்ளார்.

பணி நேரம் முடிந்ததும், அவரை வீட்டில் வந்து சந்திக்கும் படி கூறியுள்ளார். இதனால் அனுராதா அறைந்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us