கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் 'கூரியர்' சர்வீஸ் திட்டத்துக்கு வரவேற்பு ஓராண்டில் ரூ.1 கோடி லாபம்
கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் 'கூரியர்' சர்வீஸ் திட்டத்துக்கு வரவேற்பு ஓராண்டில் ரூ.1 கோடி லாபம்
கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் 'கூரியர்' சர்வீஸ் திட்டத்துக்கு வரவேற்பு ஓராண்டில் ரூ.1 கோடி லாபம்
ADDED : ஜூன் 10, 2024 11:53 PM
பாலக்காடு : கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான கம்யூ., கூட்டணி அரசு உள்ளது. மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில், பஸ் பயணியரிடம் டிக்கெட் கட்டணம் மட்டுமின்றி, இதர வழியில் வருவாய் ஈட்டுவதின் ஒரு பகுதியாக, 2023 ஜூன் 15ல் தேதி 'கூரியர்' சர்வீஸ் துவங்கப்பட்டது.
கேரளாவில், 45 அரசு பஸ் ஸ்டாண்டுகளையும், தமிழகத்தில் உள்ள கோவை மற்றும் நாகர்கோவிலை இணைத்து துவங்கிய இந்தத் திட்டத்திற்கு, மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது; லாபகரமாகவும் செயல்படுகிறது.
இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியது:
பயணியர் டிக்கெட் கட்டணம் மட்டுமின்றி, வருவாய் ஈட்டும் நோக்கத்துடன், கூரியர் சர்வீஸ் திட்டம் துவங்கப்பட்டது. போக்குவரத்து கழகத்தின் வணிக துறையின் பொறுப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆரம்பத்தில், 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாத வருவாய் கிடைத்த இத்திட்டத்தில், ஓராண்டான நிலையில், 3.82 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 1 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
இந்த திட்டம் வாயிலாக, கேரளாவில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும், 16 மணி நேரத்திற்குள் கூரியர் கொண்டு போய் சேர்க்க முடியும். ஒரு ஆண்டில், 4.32 லட்சம் கூரியர்கள் பரிமாறி உள்ளோம்.
கூரியரில் அனுப்பும் பொருட்களை வாசப்படி சேவையாக வழங்க, ஒப்பந்த அடிப்படையில் மையங்கள் துவங்குவதற்கான செயல்கள் துவங்கிஉள்ளன. இது, இரண்டாம் கட்டமாக நடைமுறைக்கு வருவதுடன், வீடுகளில் இருந்து பொருட்கள் சேகரிக்கும் அளவிற்கு திட்டம் வளர்ச்சி பெறும். தனியார் கூரியர் சேவையை ஒப்பிடும்போது, கட்டணத்தில் 30 சதவீதம் குறைவாகும்.
கூரியர் சேவை அதிகரித்து வருவதால், காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை, இரண்டு வேன்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த வேனில் தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு இடம், வாடகைக்கு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், 1 கிலோ முதல், 120 கிலோ வரை எடை கொண்ட பொருட்கள் பார்சலாக அனுப்பலாம். பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள மையத்தில் பார்சல் அல்லது கவர்கள் அளித்து பணத்தை செலுத்தினால் போதுமானது.
இவ்வாறு அவர் கூறினார்.