போலீஸ்காரரை தாக்கிய ரவுடி சுட்டு பிடிப்பு
போலீஸ்காரரை தாக்கிய ரவுடி சுட்டு பிடிப்பு
போலீஸ்காரரை தாக்கிய ரவுடி சுட்டு பிடிப்பு
ADDED : ஜூலை 27, 2024 11:15 PM
துமகூரு: போலீஸ்காரரை கத்தியால் தாக்கிய, ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
துமகூரு டவுன் சி.எஸ்., லே - அவுட்டை சேர்ந்தவர் மனோஜ், 25; ரவுடி. இவருக்கும் எதிர் கும்பலை சேர்ந்த ரவுடியான மனு, பவன் ஆகியோருக்கு இடையில் முன்விரோதம் இருந்தது.
கடந்த 21ம் தேதி இரவு மனு, பவனை, மனோஜ், அவரது கூட்டாளி ரோகித் ஆயுதங்களால் தாக்கி கொல்ல முயன்றனர்.
தலைமறைவாக இருந்த மனோஜை நேற்று முன்தினம் காலை துமகூரு டவுன் போலீசார் கைது செய்தனர்.
மனு, பவனை தாக்கிய ஆயுதங்களை, துமகூரு அருகே திப்பூர் கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பதாக மனோஜ் கூறினார். ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக, நேற்று முன்தினம் இரவு மனோஜ் அழைத்து செல்லப்பட்டார்.
ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்தை, போலீசாரிடம் காண்பித்தார். ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்த போது, போலீஸ்காரர் சேத்தனை, மனோஜ் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார்.
இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி, ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால் மனோஜ் சரண் அடையவில்லை. இதனால் மனோஜின் வலது காலில், தினேஷ்குமார் சுட்டார். சுருண்டு விழுந்தவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கையில் காயம் அடைந்த போலீஸ்காரர் சேத்தனுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 'தற்காப்புக்காக மனோஜை, இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் சுட்டு பிடித்தார்' என்று, துமகூரு எஸ்.பி., அசோக் விளக்கம் அளித்துள்ளார்.