முதியோர் எண்ணிக்கை 2050ல் இரட்டிப்பாகும்
முதியோர் எண்ணிக்கை 2050ல் இரட்டிப்பாகும்
முதியோர் எண்ணிக்கை 2050ல் இரட்டிப்பாகும்
UPDATED : ஜூலை 22, 2024 01:14 AM
ADDED : ஜூலை 22, 2024 12:36 AM

புதுடில்லி : இந்தியாவில், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை, 2050ல் இரட்டிப்பாகும். அதனால், முதியோர் நலன், குறிப்பாக பெண்களின் நலன் குறித்த திட்டங்கள் தேவை என, ஐ.நா., மக்கள்தொகை நிதி அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா., மக்கள்தொகை நிதி அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஆன்ட்ரியா வோஜ்னார் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை, முதியோர் எண்ணிக்கை, நகரமயமாதல், புலம் பெயர்தல், பருவநிலை மாறுபாடு பிரச்னைகள் ஆகியவை சவால்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாய்ப்புகளையும் உருவாக்கி தருகின்றன.
இந்தியாவில், 10 - 19 வயதுடையோர் எண்ணிக்கை, 25.2 கோடியாக உள்ளது. இவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பாலின சமத்துவம் ஆகியவற்றை ஏற்படுத்திட வேண்டும்.
நகரமயமாதல் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்திட வேண்டும்.
வரும் 2050ல், இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 34.6 கோடி என்ற அளவுக்கு இரட்டிப்பாகும். இதனால், அதற்கேற்ப சுகாதார, வீட்டு வசதிகள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களை தற்போதே உருவாக்கிட வேண்டும்.
குறிப்பாக நகரமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு பிரச்னைகளால், பெண்கள் கருவுறுதலில் பாதிப்பு அல்லது சிக்கல்கள் உருவாகும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால், கணவனால் கைவிடப்படுவது போன்ற காரணங்களால் பெண்கள் தனிமையிலும், வறுமையில் வாழும் சூழ்நிலை ஏற்படலாம். அதனால், அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.
வயதான பெண்களுக்கு தேவையான உடல்நல பாதுகாப்பு மற்றும் நிதி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.