ADDED : ஜூன் 08, 2024 04:30 AM
எலக்ட்ரானிக் சிட்டி,: பைக் மீது தண்ணீர் லாரி மோதியதில், அக்காவும், தம்பியும் உயிரிழந்தனர்.
பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி அருகில் உள்ள தொட்ட நாகமங்களாவின், கெம்பேகவுடா லே அவுட்டில் வசித்தவர் மதுமிதா, 20. இவர் பெங்களூரின், எஸ்.எஸ்.எம்.ஆர்.வி., கல்லுாரியில் படித்து வந்தார். இவரது தம்பி ரஞ்சன், 18.
கோடை விடுமுறை முடிந்து, நேற்று கல்லுாரி துவங்கியது. தம்பியுடன் பைக்கில் கல்லுாரிக்கு மதுமிதா புறப்பட்டார்.
தொட்ட நாகமங்களா அருகில் சென்றபோது, அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி, பைக் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த அக்கா, தம்பி மீது லாரி ஏறி இறங்கியது.
இதில், இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார், லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரிக்கின்றனர்.