Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'ராப்' பாடகர் சந்தன் ஷெட்டி - நிவேதிதா விவாகரத்து

'ராப்' பாடகர் சந்தன் ஷெட்டி - நிவேதிதா விவாகரத்து

'ராப்' பாடகர் சந்தன் ஷெட்டி - நிவேதிதா விவாகரத்து

'ராப்' பாடகர் சந்தன் ஷெட்டி - நிவேதிதா விவாகரத்து

ADDED : ஜூன் 08, 2024 04:50 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : 'ராப்' பாடகர் சந்தன் ஷெட்டி - நிவேதிதா கவுடா ஜோடிக்கு, பெங்களூரு இரண்டாவது குடும்ப நல நீதிமன்றம் நேற்று, விவாகரத்து வழங்கியது. இதனால் இருவரின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கன்னட திரை உலகின் இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டி, 34. 'ராப்' பாடகரான இவர், ஏராளமான மேடைகளில், ராப் பாடல்களை பாடி அசத்தி உள்ளார். 2018ல் கன்னட பிக்பாஸ் 5வது சீசனில் பங்கேற்று, அதில் வெற்றியும் பெற்றார்.

சமூக வலைத்தள பிரபலமான நிவேதிதா கவுடாவும் அந்த சீசனில் பங்கேற்றார். முதலில் இருவரும் நட்பாக பழகினர்.

கடந்த 2019ல் மைசூரு தசராவின்போது, இளைஞர் தசரா நிகழ்ச்சி மேடையில் வைத்து, நிவேதிதா கவுடாவிடம், சந்தன் ஷெட்டி காதலை வெளிப்படுத்தினார். அவரும் காதலை ஏற்றுக் கொண்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

கடந்த 2020ல் இருவரும், திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து, 'ரீல்ஸ்' வீடியோக்கள் தயாரித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

பிரச்னை இல்லை


சமீப காலமாக இருவரும் ஒன்றாக இணைந்து, வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடவில்லை. இருவரும் பிரியப் போவதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி இருவரிடம் இருந்தும், எந்த பதிலும் இல்லை.

நேற்று முன்தினம் பெங்களூரு சாந்திநகரில் உள்ள, இரண்டாவது குடும்ப நல நீதிமன்றத்தில், விவாகரத்து கேட்டு சந்தன் ஷெட்டி, நிவேதிதா கவுடா மனு செய்தனர். நீதிபதி ஜோதிஸ்ரீ விசாரித்தார். அதன் பின்னர் இருவரையும் மத்தியஸ்தரிடம் அனுப்பி வைத்தார்.

குற்றச்சாட்டு


மத்தியஸ்தர் முன், 'எங்கள் இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சில தனிப்பட்ட காரணங்களால், பரஸ்பரம் பேசி இருவரும் பிரிய முடிவு செய்து உள்ளோம்.

விவாகரத்துக்கு பின்னர் ஒருவர் மீது ஒருவர், குற்றச்சாட்டு சொல்ல மாட்டோம்' என, வாக்குமூலம் அளித்தனர். வாக்குமூல அறிக்கையை, நீதிபதி ஜோதிஸ்ரீயிடம், மத்தியஸ்தர் சமர்ப்பித்து இருந்தார்.

வெளிநாட்டில் வசிக்க...


நேற்று விவாகரத்து மனு மீது, விசாரணை நடந்தது. சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் அருகருகே அமர்ந்து, சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர்.

நீதிபதி விசாரித்தபோதும், பரஸ்பரம் பிரிவதாக கூறினர்.

இதையடுத்து அவர்கள் இருவருக்கும், விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபோதும், சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கைகோர்த்து வெளியே வந்தனர்.

பொதுவாக விவாகரத்து வழக்குகளில், கணவன், மனைவி இடையில் உள்ள பிரச்னையை சரி செய்ய, நீதிமன்றம் ஆறு மாத அவகாசம் வழங்கும். ஆனால் சந்தன் ஷெட்டி - நிவேதிதா கவுடா ஜோடிக்கு, ஒரே நாளில் விவாகரத்து கிடைத்து உள்ளது.

காரணம் தெரியவில்லை


'இனி சேர்ந்தே வாழ முடியாது' என்ற முடிவில் உறுதியாக இருக்கும், தம்பதிக்கு ஆறு மாத அவகாசம் வழங்க வேண்டியது இல்லை என, உச்சநீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இதனால் இருவருக்கும் ஒரே நாளில் விவாகரத்து கிடைத்து இருக்கிறது.

சந்தன் ஷெட்டி - நிவேதிதா கவுடா விவாகரத்துக்கு சரியான காரணம் தெரியவில்லை.

வெளிநாட்டில் வசிக்க நிவேதிதா கவுடா விரும்புவதாலும், குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாததாலும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்தில் முடிந்ததாக தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us