'மூடா' முறைகேட்டில் முதல்வருக்கு சிக்கல்? கவர்னருடன் மோத தயாராகும் காங்., அரசு!
'மூடா' முறைகேட்டில் முதல்வருக்கு சிக்கல்? கவர்னருடன் மோத தயாராகும் காங்., அரசு!
'மூடா' முறைகேட்டில் முதல்வருக்கு சிக்கல்? கவர்னருடன் மோத தயாராகும் காங்., அரசு!
ADDED : ஜூலை 31, 2024 05:06 AM
பெங்களூரு, : 'மூடா' முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவை சிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறி, அவர் மீது விசாரணை நடத்த கவர்னர், அனுமதி தர கூடாது என்று நாளை நடக்க உள்ள அவசர கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்
மேலும், சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அவரிடம் விசாரணை நடத்த அனுமதி தரும்படி, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் கடந்த வாரம் புகார் அளித்தார்.
முறைகேட்டில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, சில நாட்களாக அவ்வப்போது ராஜ்பவனுக்கு சென்று ஆவணங்களை வழங்கி வருகிறார். இதற்கிடையில், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கவர்னரிடம் புகார் அளித்துஉள்ளனர்.
இந்த முறைகேடு குறித்து முழு அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில தலைமை செயலருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இந்த செயல்பாடுகளை பார்க்கும் போது, முதல்வரை சிக்கலில் சிக்க வைக்க, திரைமறைவில் முயற்சிகள் நடப்பதாக, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவசர கூட்டம்
இந்நிலையில், நாளை காலை 11:00 மணிக்கு, முதல்வர் சித்தராமையா, அவசரமாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்ளார்.
அந்த கூட்டத்தில், முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னர் அனுமதி தர கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு முன், எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, ஷிவமொகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் சிராஜுதீன் பாஷா, பால்ராஜ் ஆகியோர் எடியூரப்பாவுக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார்.
அப்போது, 2011 ஜனவரி 21ல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், 'எடியூரப்பா மீதான புகார் மீது விசாரணை நடத்த அனுமதி தர கூடாது' என்று தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதை நிராகரித்த அப்போதைய கவர்னர் ஹம்சராஜ் பரத்வாஜ், எடியூரப்பா மீது விசாரணை நடத்த அனுமதி அளித்தார். அதன்பின் நடந்த விசாரணை, நீதிமன்ற உத்தரவு என அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால், அவர் சிறை வாசம் அனுபவித்தார்.
இந்த நிலைமை, தற்போதைய முதல்வர் சித்தராமையாவுக்கும் ஏற்படுமோ என்று கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.