திறக்காத மெட்ரோ ரயில் கதவுகள் பயணியர் 2 மணி நேரம் அவதி
திறக்காத மெட்ரோ ரயில் கதவுகள் பயணியர் 2 மணி நேரம் அவதி
திறக்காத மெட்ரோ ரயில் கதவுகள் பயணியர் 2 மணி நேரம் அவதி
ADDED : ஜூன் 14, 2024 07:37 AM
பெங்களூரு: டிரினிட்டி மெட்ரோ ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயில் கதவுகள் திறக்காததால் பயணியர் இரண்டு மணி நேரம் அவதி அடைந்தனர்.
பெங்களூரு செல்லகட்டா -- ஒயிட் பீல்டு இடையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை செல்லகட்டாவில் இருந்து புறப்பட்ட ரயில், ஒயிட் பீல்டு நோக்கி சென்றது. டிரினிட்டி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 9:58 மணிக்கு ரயில் வந்தது.
அந்த ரயில் நிலையத்தில், இறங்குவதற்கு பயணியர் தயாராகி கொண்டிருந்தனர். ஆனால், ரயிலின் கதவுகள் திறக்கவில்லை. அரை மணி நேரம் ஆகியும் கதவுகள் திறக்கப்படாததால், அந்த ரயில் மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ரயில் வராத தண்டவாளத்தில் வைத்து, கதவுகளை திறக்க வைக்கும் பணியில் மெட்ரோ இன்ஜினியர்கள் ஈடுபட்டனர். காலை 11:50 மணிக்கு கதவுகள் திறக்கப்பட்டன. பயணியர் இறங்கி வேறு ரயில்கள் மூலம், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, டிரினிட்டி ரயில் நிலையம் வந்த மெட்ரோ ரயிலின் கதவுகள் திறக்கவில்லை. அந்த ரயிலை மெஜஸ்டிக் ரயில் நிலையம் கொண்டு சென்று, கதவுகள் திறக்கப்பட்டன. பயணியருக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக வருந்துகிறோம். தற்போது செல்லகட்டா- - ஒயிட்பீல்டு இடையில் வழக்கம் போல் ரயில் சேவை துவங்கியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.