'பால் உற்பத்தியாளரின் நன்மையை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை'
'பால் உற்பத்தியாளரின் நன்மையை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை'
'பால் உற்பத்தியாளரின் நன்மையை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை'
ADDED : ஜூலை 02, 2024 09:38 PM

பெங்களூரு: ''பால் உற்பத்தியாளர்களின் நன்மையை, எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. பால் உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில், பால் அளவை உயர்த்தி உள்ளோம்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 1 கோடி லிட்டர் பால் உற்பத்தி சாதனை, முதல்வரின் கிருஷ்ணா அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது முதல்வர் சித்தராமையா, கோ பூஜை செய்தார்.
பின், முதல்வர் சித்தராமையா பேசியதாவது: கர்நாடகாவில் கடந்தாண்டு இதே நேரத்தில், 90 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியானது. தற்போது நாள் ஒன்றுக்கு, 1 கோடி லிட்டர் பால் உற்பத்தியை எட்டியிருப்பது, கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பின் மைல் கல்லாகும்.
பால் உற்பத்தியாளர்களிடம், பால் வேண்டாம் என்று சொல்ல முடியாது. எனவே தான், அரை லிட்டர், 1 லிட்டர் பால் பாக்கெட்டில் கூடுதலாக 50 மி.லி., பால் தருகிறோம். இதற்காக 2 ரூபாய் அதிகரித்துள்ளோம்.
இது பால் விலை உயர்வல்ல. ஆனால், எதிர்க்கட்சிகள் இதை புரிந்து கொள்ளவில்லை.
பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை செய்ய, எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. நாங்கள் வந்த பின், பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் மானியம் உயர்த்தி உள்ளோம்.
இது எதுவும் தெரியாமல், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேசாத அமைச்சர், மாஜி எம்.பி.,
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜண்ணா, ஜமிர் அகமது கான், செலுவராயசாமி, வெங்கடேஷ், பைரதி சுரேஷ், முன்னாள் எம்.பி., சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூடுதல் துணை முதல்வர் பதவியை உருவாக்க வேண்டும் என, அமைச்சர் ராஜண்ணா கூறி வந்தார். இது சிவகுமாரின் சகோதரர் சுரேசுக்கு பிடிக்கவில்லை. இந்நிகழ்ச்சியில் இருவரும் நேருக்குநேர் சந்தித்த போதும், ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.
கே.எம்.எப்., சார்பில், 1 கோடி லிட்டர் பால் உற்பத்தியாவதை நினைவுகூரும் வகையில், பால் உற்பத்தியாளரை, முதல்வர் சித்தராமையா கவுரவித்தார். இடம்: பெங்களூரு.