ADDED : ஜூன் 15, 2024 01:56 AM
'நீட்' தேர்வில் இதுவரை இல்லாத வகையில் முறைகேடு நடந்துள்ளது. யாரெல்லாம் தவறு செய்தனரோ, அவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட வேண்டும். சி.பி.ஐ., விசாரணை வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இறுதியான, சரியான தீர்மானம் கிடைக்க வேண்டும். இப்பிரச்னை தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. 1,653 மாணவர்கள் மட்டும் மீண்டும் தேர்வு எழுதுவது சரியான தீர்வு அல்ல. அதை விட முக்கிய தீர்வை, உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும்.
அசோகன்
தேசிய தலைவர்,
இந்திய மருத்துவர் சங்கம்
'நீட்' தேர்வு பிரச்னையை மோடி அரசு மூடி மறைக்க பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவராகும் கனவோடு ஒரு லட்சம் மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்கு, 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆண்டுதோறும் இரவு பகலாக படித்து நீட் தேர்வை எழுதுகின்றனர்.
இந்த முறை மோடி அரசு, தேசிய தேர்வு முகமையை தவறாக பயன்படுத்தி மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலில் பெருமளவில் மோசடி செய்துள்ளது. இதனால், ஒதுக்கீடு இடங்களுக்கான 'கட் ஆப்' மதிப்பெண்கள் உயர்ந்துள்ளன.
கருணை மதிப்பெண், வினாத்தாள் கசிவு, தேர்வு மோசடி போன்றவற்றால் மெரிட் மாணவர்களுக்கு அரசு கல்லுாரிகளில் சேர்க்கை கிடைக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் வினாத்தாள் கசியவில்லை என்றால், ஏன் இது தொடர்பாக பீஹாரில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கல்வி மாபியாக்களுக்கு 30 முதல் 50 லட்சம் ரூபாய் தந்ததாக பாட்னா பொருளாதார குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளதை மறுக்க முடியுமா?
ம.பி.,யில் நடந்த 'வியாபம்' தேர்வு மோசடியின் மற்றொரு வடிவம் தான் இந்த நீட் முறைகேடு.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.