Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்களுக்கு கெடு

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்களுக்கு கெடு

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்களுக்கு கெடு

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்களுக்கு கெடு

ADDED : மார் 12, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு,: “உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, நிர்ணயித்த நேரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்,” என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உத்தரவிட்டார்.

நேற்று காலை மேல்சபை கூடியதும், ம.ஜ.த., உறுப்பினர் சரவணா கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதில் வேண்டினார்.

மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: உங்கள் கேள்வி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அரசு பதில் அளிக்கும்.

சரவணா: நான் எழுப்பிய மூன்று கேள்விகளும், நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இதே போன்று நடந்தால், நாங்கள் ஏன் சபைக்கு வர வேண்டும்? கேள்விகளை எதற்காக கேட்க வேண்டும்; அரசுக்கு பதிலளிக்க முடியாதா?

அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா: உறுப்பினரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை கேள்வியில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களின் இன்றைய மார்க்கெட் மதிப்பு குறித்து விபரங்களை கேட்டுள்ளார். இந்த விபரங்களை தெரிவிக்க, அவகாசம் வேண்டும். எனவே நேரம் கேட்டுள்ளோம்.

சரவணா: இம்முறை கூட்டத்தொடர் துவங்கியபோது, மூன்று கேள்விகளை கேட்டிருந்தேன். மூன்று கேள்விகளுக்கும், இதே போன்ற பதிலையே அரசு அளித்துள்ளது. கேள்வி கேட்பது உறுப்பினர்களின் உரிமை. அரசு பதில் அளிக்காமல், நழுவுகிறதா அல்லது பதில் இல்லையா?

அமைச்சர் போசராஜு: அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க, அரசு தயாராக உள்ளது. ஆனால் துணை கேள்வியில், கூடுதல் விபரங்களை அளிக்க வேண்டியுள்ளதால், அமைச்சர் அவகாசம் கேட்டுள்ளார்.

ம.ஜ.த., - போஜேகவுடா: இது சரவணா ஒருவரின் பிரச்னை மட்டும் அல்ல. இந்த அரசு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, பதில் அளிப்பது இல்லை.

கேள்வி எழுப்புவது ஒவ்வொருவரின் கடமை. அரசு இப்படி நடந்து கொண்டால், சபைக்கு நாங்கள் எதற்காக வர வேண்டும்?

பசவராஜ் ஹொரட்டி: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அரசு பதில் அளிக்க வேண்டும். அவ்வப்போது அவகாசம் கேட்பது சரியல்ல.

இதற்கு முன்பு 15 நாட்களில் பதில் அளிக்கும்படி, நான் உத்தரவிட்டேன். ஆனால் ஒரு வாரத்துக்குள், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us