Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தங்கவயல் எம்.எல்.ஏ.,வை கண்டுகொள்ளாத அமைச்சர்

தங்கவயல் எம்.எல்.ஏ.,வை கண்டுகொள்ளாத அமைச்சர்

தங்கவயல் எம்.எல்.ஏ.,வை கண்டுகொள்ளாத அமைச்சர்

தங்கவயல் எம்.எல்.ஏ.,வை கண்டுகொள்ளாத அமைச்சர்

ADDED : மார் 11, 2025 06:23 AM


Google News
காங்., மூத்த எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியுடன், பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா அரைமணி நேரமாக ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். லட்சுமண் சவதி முன்பு, பா.ஜ.,வில் இருந்தவர். துணை முதல்வராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

பா.ஜ., மீது அதிருப்தியில் இருக்கும், அக்கட்சி எம்.எல்.ஏ., சோமசேகர், சட்டசபைக்குள் வந்தபோது, அவரை கட்சியினர் யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரும் தனியாக அமர்ந்து, பட்ஜெட் விவாத புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து பா.ஜ., - எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா, சோமசேகரிடம் பேசினார். இருவரும் 10 நிமிடங்களுக்கு மேல் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர்

பா.ஜ., தலைவர் விஜயேந்திரா மீது அதிருப்தியில் இருக்கும், அக்கட்சி மூத்த எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆகிய இருவரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும் ஏதோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தனர்

கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் மீது, தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அதிருப்தியில் உள்ளார். சட்டசபை கூட்டத்தொடரின்போது, பைரதி சுரேஷ் அருகே சென்று, ரூபகலா ஏதோ பேச முயன்றார். அவரை கண்டும் காணாமல் அமைச்சர் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து, ரூபகலாவை பார்த்தார். பின், இருவரும் ஏதோ பேசினர். உரையாடல் முடிந்ததும் தன் இருக்கைக்கு ரூபகலா திரும்பிச் சென்றார்

சபாநாயகர் இருக்கையில் துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி அமர்ந்திருந்தபோது, துருவகெரே ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா எழுந்து நின்று, தனக்கு பேச வாய்ப்பு தரும்படி, கையை உயர்த்தி கேட்டார். அவரை, துணை சபாநாயகர் கவனிக்கவில்லை. இதனால் கிருஷ்ணப்பா, துணை சபாநாயகரை பார்த்து, 'கொஞ்சம் எங்களையும் பார்த்து பேசுங்கள்' என்று கூறினார். இதையடுத்து கிருஷ்ணப்பா பேச, துணை சபாநாயகர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்

குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத் சட்டசபைக்குள் அங்கும், இங்குமாக நடந்து கொண்டே இருந்தார். மேலும் சில எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் இருக்கையில் அமராமல் ஆங்காங்கே நின்று கொண்டு இருந்தனர். இதை கவனித்த சபாநாயகர் காதர், “எம்.எல்.ஏ.,க்களை பார்த்து உங்கள் இருக்கையில் அமருங்கள்,” என்றார்

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா, எழுந்து, சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் ஹர்ஷத் அருகே சென்றார். அவரது பக்கத்தில் அமர்ந்து, ஐந்து நிமிடங்கள் ஏதோ பேசினார். பின், எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கிடம் சென்று, முனிரத்னா பேசினார். பின், இருக்கைக்கு சென்று அமர்ந்துவிட்டார்.

சிரகுப்பா காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகராஜா, மெதுவாக பேசினார். “கொஞ்சம் சத்தமாக பேசுங்கள்,” என, சபாநாயகர் காதர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us