Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கர்நாடகாவை இரண்டாக பிரிக்க வேண்டும் ஒக்கலிக மஹா சமஸ்தான மடாதிபதி விருப்பம்

கர்நாடகாவை இரண்டாக பிரிக்க வேண்டும் ஒக்கலிக மஹா சமஸ்தான மடாதிபதி விருப்பம்

கர்நாடகாவை இரண்டாக பிரிக்க வேண்டும் ஒக்கலிக மஹா சமஸ்தான மடாதிபதி விருப்பம்

கர்நாடகாவை இரண்டாக பிரிக்க வேண்டும் ஒக்கலிக மஹா சமஸ்தான மடாதிபதி விருப்பம்

ADDED : ஜூன் 29, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாருக்கு, முதல்வர் பதவியை விட்டுத் தரும்படி சித்தராமையாவிடம் கூறிய, விஸ்வ ஒக்கலிக மஹா சமஸ்தான மடத்தின் சந்திரசேகரநாத சுவாமிகள், கர்நாடகாவை இரண்டாக பிரிக்க வேண்டும் என கூறி, மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சமீப நாட்களாக மடாதிபதிகள் அரசியல் தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுகின்றனர். அரசியல் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுகின்றனர்.

லோக்சபா தேர்தலின்போது, தார்வாட் தொகுதியில் பிரஹலாத் ஜோஷிக்கு 'சீட்' அளிக்கக் கூடாது என, திங்களேஸ்வரா சுவாமிகள் வலியுறுத்தினார். பா.ஜ., மேலிடம் செவி சாய்க்காததால், சுயேச்சையாக களமிறங்கவும் தயாரானார். இறுதியில் மூத்த சுவாமிகளின் உத்தரவுக்கு பணிந்து, தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டார்.

இப்போது முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து, காங்கிரஸ் தலைவர்களை விட, மடாதிபதிகள் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர். தங்கள் சமுதாயத்துக்கு முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என, அந்தந்த சமுதாய மடாதிபதிகள் முரண்டு பிடிக்கின்றனர்.

பெங்களூரின் கன்டீரவா ஸ்டேடியத்தில் கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சி நடந்தபோது, ஒக்கலிக சமுதாயத்தின் துணை முதல்வர் சிவகுமாருக்கு, முதல்வர் பதவியை விட்டுத் தரும்படி, மேடையில் இருந்த சித்தராமையாவிடம், விஸ்வ ஒக்கலிக மஹா சமஸ்தான மடத்தின் சந்திரசேகரநாத சுவாமிகள் பகிரங்கமாக கூறினார்.

அதேபோன்று, ஸ்ரீசைல சென்னசித்தராம பண்டிதராத்யா சிவாச்சார்யா சுவாமிகள், முதல்வரை மாற்றம், கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க திட்டமிட்டால், வீரசைவ லிங்காயத் சமுதாயத்தினருக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

அரசியல்வாதிகளைப் போன்று, தாம் சார்ந்த சமுதாயத்துக்கு மடாதிபதிகள் பதவி கேட்பது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் கர்நாடகாவை இரண்டாக பிரிக்க வேண்டும் என, சந்திரசேகர சுவாமிகள் கூறியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:

கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சியில், முதல்வர் பதவி மட்டுமின்றி, வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசினேன். கர்நாடகா இரண்டாக பிரிக்கப்பட வேண்டும். வட கர்நாடகா, தென் கர்நாடகா என, பிரிக்க வேண்டும். அப்போதுதான் வட மாவட்டங்கள் வளர்ச்சி அடையும்.

துணை முதல்வர் சிவகுமார், ஆரம்பத்தில் இருந்தே காங்கிரசுக்காக கஷ்டப்பட்டவர். கட்சிக்கு 135 தொகுதிகள் கிடைக்க, அவரது உழைப்பே காரணம். எனவே அவர் முதல்வராக வேண்டும் என, கூறினேன். அவர் முதல்வரானால் எங்கள் சமுதாயத்தினருக்கு நல்லது.

சித்தராமையா ஏற்கனவே, ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியை அனுபவித்தார். இப்போது ஓராண்டாக பதவியில் அமர்ந்துள்ளார். எனவே சிவகுமாருக்கு, முதல்வர் பதவியை விட்டுத்தர வேண்டும் என, கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு பிரிக்க எதிர்ப்பு

சந்திரசேகர நாத சுவாமிகள் கூறுகையில், ''பெங்களூரை நான்காக, ஐந்தாக பிரிக்கக் கூடாது. கெம்பே கவுடா என்றால் பெங்களூரு; பெங்களூரு என்றால் கெம்பே கவுடா. பெங்களூரை பிரித்தால் கெம்பே கவுடா பெயர் போய்விடும். அவர் பெயர் நிலைக்க வேண்டுமானால், பெங்களூரு ஒன்றாக இருக்க வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us