தர்ஷனுக்கு திருமண அழைப்பிதழ் சிறைக்கு சென்று வழங்கிய இயக்குனர்
தர்ஷனுக்கு திருமண அழைப்பிதழ் சிறைக்கு சென்று வழங்கிய இயக்குனர்
தர்ஷனுக்கு திருமண அழைப்பிதழ் சிறைக்கு சென்று வழங்கிய இயக்குனர்
ADDED : ஜூலை 19, 2024 05:17 PM

பெங்களூரு:சிறையில் உள்ள நடிகர் தர்ஷனை சந்தித்த, திரைப்பட இயக்குனர் தருண் சுதீர், தன் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
நடிகர் தர்ஷன் நடிப்பில் தயாரான, கன்னட திரைப்படம் 'காட்டேரா' 2023 டிசம்பரில் திரைக்கு வந்து, அமோகமாக ஓடி வசூலை அள்ளியது. இந்த படத்தை இயக்கியவர் தருண் சுதீர். தர்ஷனும், தருண் சுதீரும் நெருக்கமான நண்பர்கள்.
தருண் சுதீருக்கு, ஆகஸ்ட் 10ம் தேதி வரவேற்பும், 11ல் திருமணமும் நடக்கவுள்ளது. நடிகை சோனலை கரம் பிடிக்கிறார். பரஸ்பரம் காதலித்தனர். இவர்களின் திருமண பேச்சை முன் நின்று நடத்தியவர் தர்ஷன் என கூறப்படுகிறது. தன் திருமண அழைப்பிதழை முதலில் தர்ஷனுக்கு கொடுக்க வேண்டும் என, இருவரும் விரும்பினர்.
ஆனால், ரேணுகாசாமி கொலை வழக்கில், தர்ஷன் கைதாகி சிறையில் இருக்கிறார். எனவே, இவர் வெளியே வரும் வரை, திருமணத்தை தள்ளி வைக்க, தருண் விரும்பினார். ஆனால் வீட்டின் மூத்தவர்களும், தர்ஷனும் இதற்கு சம்மதிக்கவில்லை. குறித்த நாளில் திருமணம் நடக்க வேண்டும் என, வலியுறுத்தியதால் தருண் ஒப்புக்கொண்டார்.
முதல் அழைப்பிதழை தர்ஷனுக்கு கொடுக்க விரும்பினார். நேற்று காலை 11:00 மணியளவில், தருணும், சோனலும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு வந்தனர். அதிகாரிகளின் அனுமதி பெற்று திருமண அழைப்பிதழை, தர்ஷனிடம் கொடுத்து வாழ்த்து பெற்று சென்றனர்.
***