ADDED : ஜூன் 16, 2024 10:54 PM

ஹூப்பள்ளி: ''ரசிகர் ரேணுகாசாமியை கொடூரமாக கொலை செய்த நடிகர் தர்ஷன் மனிதனா அல்லது ராட்சஷனா,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத் கண்டித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தர்ஷன் மனிதனா அல்லது அரக்கனா. இவர் இப்படிப்பட்ட நபர் என, நான் நினைத்தே பார்க்கவில்லை. ரேணுகாசாமி என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இவரை விவசாயத் துறை துாதராக நியமித்திருந்தனர்.
அரசு செய்யும் தவறு ஒன்று, இரண்டு அல்ல. சமூக விரோதிகளுக்கு ராஜ உபச்சாரம் செய்கிறது. குற்றவாளிகள், குற்றவாளிகள்தான். இவர்களை காப்பாற்ற முற்படுவதோ, ராஜ உபச்சாரம் செய்வதும் சரியல்ல.
கர்நாடகா அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியதை கண்டித்து, தார்வாட் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, இன்று காலை 11:00 மணிக்கு, பா.ஜ., போராட்டம் நடத்தும்.
லோக்சபா தேர்தலுக்கு முன், காங்கிரஸ் அட்சய பாத்திரம் என, பெரிய அளவில் விளம்பரம் கொடுத்தது. இப்போது விலையை உயர்த்தி, மக்களின் கைகளில் 'சொம்பு' கொடுத்துள்ளது. வாக்குறுதி திட்டங்கள் பெயரில், ஒரு பக்கம் கொடுத்து, மற்றொரு பக்கம் பறிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.