உள்ளத்தை கொள்ளை கொள்ளும் தார்வாட் குழந்தைகள் தொட்டில்கள்
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் தார்வாட் குழந்தைகள் தொட்டில்கள்
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் தார்வாட் குழந்தைகள் தொட்டில்கள்
ADDED : ஜூலை 07, 2024 03:28 AM

முதல் பிரசவம் முடிந்து பிறந்த வீட்டில் இருந்து கணவனின் புகுந்த வீட்டுக்குச் செல்லும் மகளுக்கு, தொட்டில் பரிசளிப்பது இந்திய மரபு.
நவீன வேகத்தில், பிளாஸ்டிக், நார், இரும்பு தொட்டில்கள் சந்தைக்கு வந்தாலும், மரத்தொட்டில்களுக்கு தேவை இருந்து கொண்டே தான் இருககிறது.
வெளிநாடுகளிலும் மவுசு
தார்வாட் மாவட்டம் கலகட்கியில், மரத்திலானான தொட்டிகள் கலை நயத்துடன் வடிவமைக்கப்படுகின்றன. இந்த தொட்டிலுக்கு, கர்நாடகாவில் மட்டுமல்ல, உள்நாடு, வெளிநாடுகளிலும் மவுசு உள்ளது.
தரமான மரத்தில் செய்யப்படுவதால், இத்தொட்டில் பிரபலமமடைய காரணம். அத்துடன், தொட்டிலை சுற்றிலும் நேர்த்தியான கலைப்படைப்புக்கு பிரபலமானது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தொட்டிலில், 'ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், கிருஷ்ணரின் சிறு வயது குறும்புகள், தர்மராயா, மதீனா, ஜெருசலேம், வாடிகன் உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்படுகின்றன.
அழியாது
இந்த ஓவியங்கள் தாவரங்கள், மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்களால் வரையப்படுகின்றன. இதனால் பல ஆண்டுகள் இந்த ஓவியங்கள் நீடித்து நிற்கும்.
தொட்டிலில் ஓவியங்கள் வரைய, பனை ஓலையில் இருந்து மெல்லிய குச்சிகளை பயன்படுகின்றன.
ஆறு தலைமுறைக்கும் மேலாக, இப்பகுதியினர், தொட்டில் தயாரிக்கும் கலையில் உன்னிப்பாக பயிற்சி செய்து வருகின்றனர்.
தொட்டில்கள் தவிர, மேஜைகள், டீபாய்கள், சோபா செட்களும் தயாரிக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை, பலரும் கலைநயமிக்க தொட்டில்களை வாங்க இங்கு வருகின்றனர்.
பெயர் சூட்டு
மறைந்த நடிகர் அம்பரிஷ், நடிகர் யஷ் - ராதிகா ஆகியோரின் முதல் குழந்தைக்கு, இங்கிருந்து வாங்கிய தொட்டிலில் தான் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சுமண் சாஹுகர் கூறியதாவது:
இந்த கலையை, எங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து பயின்று வருகிறோம். குடும்ப பாரம்பரியத்தை உடைக்காமல் ஈடுபட்டு வருகிறோம்.
ஆண்டு முழுதும் வேலை செய்தாலும் 25 முதல் 30 தொட்டில்களை மட்டுமே தயாரிக்க முடியும். ஒரு தொட்டிலை செய்ய, குறைந்தது ஒரு மாதமாவது ஆகும்.
இந்த தொட்டிலுக்காக, தண்டேலி வனப்பகுதியில் இருந்து தேக்கு மரங்களை கொள்முதல் செய்கிறோம். இயற்கையான வண்ணம் பூசுவதால், குழந்தைக்கு எந்த நீங்கும் விளைவிக்காது.
இந்த தொட்டில்கள், 20,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர்கள் இதை தொட்டிலாக மட்டும் பார்க்கவில்லை, கலைப்படைப்பாக பார்க்கின்றனர்.
தொட்டிலை ஒருமுறை ஆட்டிவிட்டால், அதே சீரான வேகத்தில் பல நிமிடங்கள் ஆடிக் கொண்டே இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
7_Article_0008, 7_Article_0009, 7_Article_0010
மரத்தொட்டில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள். (அடுத்த படம்) கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட தொட்டில். (கடைசி படம்) தொட்டிலில் இடம் பெற்றுள்ள கிருஷ்ணரின் இளமை கால பருவத்தின் ஓவியங்கள்.- நமது நிருபர் -