Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம்: எலான் மஸ்குக்கு முன்னாள் அமைச்சர் பதிலடி

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம்: எலான் மஸ்குக்கு முன்னாள் அமைச்சர் பதிலடி

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம்: எலான் மஸ்குக்கு முன்னாள் அமைச்சர் பதிலடி

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து சந்தேகம்: எலான் மஸ்குக்கு முன்னாள் அமைச்சர் பதிலடி

ADDED : ஜூன் 16, 2024 11:17 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு குறித்து, தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதற்கான கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் மாகாண அளவிலான தேர்தல்கள் நடந்து வருகின்றன.

சமூக வலைதளம்


முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடியின் உறவினரான ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் இதில் சுயேச்சையாக போட்டியிட முயற்சித்து வருகிறார்.

போர்ட்டோரிகாவில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதற்கு, மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான எலான் மஸ்க், பதில் பதிவிட்டிருந்தார்.

அதில், 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை நம்ப முடியாது. மனிதர்களால் அல்லது செயற்கை நுண்ணறிவால் அதில் மாற்றங்கள் செய்ய முடியும். மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை கைவிட வேண்டும்' என, அவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டிலும், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக கட்சிகள் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், எலான் மஸ்க் பதிவுக்கு பதிலளித்து, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சருமான ராஜிவ் சந்திரசேகர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

எலான் மஸ்கின் கருத்து, ஒரு பொதுவான கருத்தாக உள்ளது. பாதுகாப்பான டிஜிட்டல் மென்பொருளை தயாரிக்க முடியாது என்பதை குறிப்பதுபோல் உள்ளது. இது தவறு.

ப்ளூடூத், வைபை, இன்டர்நெட் என, எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் செயல்படக் கூடிய மூன்றாம் தலைமுறை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை இந்தியாவில் பயன்படுத்துகிறோம்.

இது தொழிற்சாலையில் கட்டுப்பாட்டு முறையுடன் உருவாக்கப்படுகிறது. அதில் யாரும் எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அது வேலை செய்யாது. இதுபோன்ற சிறப்பான இயந்திரங்களை நாங்கள் உருவாக்கிஉள்ளோம். உங்களுக்கு வேண்டுமானால், அது குறித்த பயிற்சியை, செயல் விளக்கத்தை அளிக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருப்பு பெட்டி


தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மூன்றாம் தலைமுறை மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை, மூன்று ஐ.ஐ.டி.,க்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர்.

தேர்தல் கமிஷனின் உயர் தொழில்நுட்ப நிபுணர் குழு, இயந்திரங்களை பராமரித்து, அவற்றை கண்காணித்து வருகிறது.

இது குறித்து, மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் தினேஷ் சர்மா கூறியுள்ளதாவது:

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களும், நம்முடைய இயந்திரங்களும் வேறுபட்டவை. எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் செயல்படக் கூடியது நம்முடைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்.

அதில் யாராலும் திருத்தவோ, மாற்றவோ முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

வட மேற்கு மும்பை தொகுதியில், 48 ஓட்டுகளில் வெற்றி பெற்ற சிவசேனா வேட்பாளர், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை, தன் மொபைல்போன் வாயிலாக திறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நம் நாட்டில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், விமானங்களில் இருக்கும் கருப்புப் பெட்டி போன்றது. அதை யாரும் பரிசோதித்து பார்க்க முடியாது.

அதற்கு அனுமதியும் தரப்படுவதில்லை. இது நம்முடைய தேர்தல் நடைமுறையின் வெளிப்படைதன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், எலான் மஸ்க் பதிவையும் அவர் இந்தப் பதிவுடன் இணைத்துஉள்ளார்.

முறைகேடு புகார்: எம்.பி., உறவினர் மீது வழக்கு

மஹாராஷ்டிராவின் வடமேற்கு மும்பை லோக்சபா தொகுதியில், சிவசேனாவின் ரவீந்திர வைகர், 48 ஓட்டுகள் வித்தியாசத்தில், சிவசேனா - உத்தவ் தாக்கரே பிரிவின் கஜானன் கீர்த்திகரை வென்றார். ஓட்டு எண்ணிக்கையின்போது, இவருடைய உறவினர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஓட்டு எண்ணிக்கையின்போது, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை திறப்பதற்கு, தேர்தல் எண்ணும் அதிகாரிகளுக்கு, ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண் அனுப்பி வைக்கப்படும். ஆனால், குறிப்பிட்ட ஓட்டு எண்ணும் மையத்தில் பணியாற்றிய தினேஷ் கவுரவின் மொபைல்போன், ரவீந்திர வைகரின் உறவினரிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, அந்த அதிகாரி, எம்.பி.,யின் உறவினர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த அதிகாரியின் மொபைல்போனில் இருந்து அழைப்புகள் செய்யப்பட்டதா, பெறப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.மேலும், ஓட்டு எண்ணிக்கையில் ஏதேனும் குளறுபடி செய்யப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. மும்பை வடமேற்கு லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்ஷி நேற்று கூறுகையில், ''மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை திறக்க ஒடிபி தேவையில்லை. இது தொடர்பாக வரும் செய்தி தவறானது,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us