Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ போதை பொருள் 'பார்சல்' விவசாயியிடம் ரூ.2 கோடி மோசடி

போதை பொருள் 'பார்சல்' விவசாயியிடம் ரூ.2 கோடி மோசடி

போதை பொருள் 'பார்சல்' விவசாயியிடம் ரூ.2 கோடி மோசடி

போதை பொருள் 'பார்சல்' விவசாயியிடம் ரூ.2 கோடி மோசடி

ADDED : ஜூன் 02, 2024 01:42 AM


Google News
குடகு, மோசடி பேர்வழிகளின் மிரட்டலை நம்பி, காபி விவசாயி ஒருவர், 2.20 கோடி ரூபாயை பறிகொடுத்த சம்பவம், கர்நாடக மாநிலம் குடகு அருகே நடந்துள்ளது.

கர்நாடகாவில் சமீப நாட்களாக சைபர் குற்றங்கள் அதிகரிக்கின்றன. குறிப்பாக பெங்களூரில் மிக அதிகம்.

பரிசு விழுந்துள்ளதாகக் கூறுவது, 'உங்கள் பெயருக்கு போதைப் பொருள் வந்துள்ளது' என மிரட்டுவது உட்பட பல வழிகளில் அப்பாவிகளிடம் பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்போது இத்தகைய மோசடி, குடகு மாவட்டத்துக்கும் விரிவடைந்துள்ளது.

குடகு விராஜ்பேட்டின், கரடிகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவய்யா, 70; காபி விவசாயி. சமீபத்தில் இவரை, அறிமுகமில்லாத நபர் ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டார். 'பெடக்ஸ்' கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டார்.

'உங்கள் பெயருக்கு பார்சல் வந்துள்ளது. அதில் போதைப் பொருள் உள்ளது. இந்த விஷயத்தை போலீசாரிடம் தெரிவித்தால், நீங்கள் பிரச்னையில் சிக்குவீர்கள். அப்படி நடக்கக்கூடாது என்றால், நீங்கள் பணம் கொடுக்க வேண்டும்' என, போனில் பேசியவர் மிரட்டியுள்ளார்.

பீதியடைந்த தேவய்யா, பணம் கொடுக்க சம்மதித்தார். இந்த விஷயத்தை குடும்பத்தினரிடம் அவர் கூறவில்லை. அவர்களுக்கு தெரியாமல், தன் கணக்கில் இருந்து, கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிய நபரின் வங்கிக் கணக்குக்கு, பகுதி பகுதியாக 2.20 கோடி ரூபாய் வரை பரிமாற்றம் செய்தார்.

அந்நபர் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், வேறு வழியின்றி தன் குடும்பத்தினரிடம் நடந்ததை கூறினார். அவர்கள், மடிகேரி சைபர் கிரைம் போலீசாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகளும் விசாரணையை துவக்கி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us