மருத்துவ சேவை பெறுவதற்கு அழைப்பு நாளிதழ் வினியோகிப்பாளர்கள் வரவேற்பு
மருத்துவ சேவை பெறுவதற்கு அழைப்பு நாளிதழ் வினியோகிப்பாளர்கள் வரவேற்பு
மருத்துவ சேவை பெறுவதற்கு அழைப்பு நாளிதழ் வினியோகிப்பாளர்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 11, 2024 06:33 AM

பெங்களூரு, : மருத்துவ சேவை பெற, பெயர் பதிவு செய்யுமாறு அரசிடமிருந்து அழைப்பு வந்துள்ளதற்கு, நாளிதழ் வினியோகிப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
காலையில எழுந்திருச்சு டீ குடிச்சாச்சு... அடுத்த வேலையா, நாளிதழ் படிக்க வேண்டியதுதான் அப்படின்னு சொல்றவங்கள நாம பார்த்திருப்போம்.
டீ குடித்ததற்கு பின்பு, நாளிதழ் படிக்காவிட்டால் பொழுதே ஓடாது அப்படின்னு சொல்றவங்களையும் நாம பார்த்து இருப்போம். நாளிதழை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும், நாளிதழ் வினியோகிப்பாளர்கள் படும் கஷ்டத்தை சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கனமழை பெய்தாலும், கடும் குளிர் வாட்டி வதைத்தாலும், நாளிதழ் வினியோகிப்பாளர்கள், ஒரு நாள் கூட விடுமுறை எடுப்பதில்லை. தினமும் அதிகாலையில் தங்கள் பணிக்கு சரியாக வந்து விடுவர்.
நாளிதழ் வினியோகம் செய்வோருக்கு தினமும் வேலை தான். மற்ற அனைத்தையும் மறந்து வேலைக்கு வந்து விடுவர்.
சில வீடுகளில் நாளிதழ்களை சரியாக வினியோகிக்கவில்லை என்று திட்டு வாங்கினாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தங்கள் வேலைகளை தொடர்ந்து செய்வர்.
நாளிதழ்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்க சைக்கிளிலோ, பைக்கிலோ வேகமாகவும் செல்வர். சில நேரங்களில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு. சிலர் உயிரிழந்துள்ளனர்.
இப்படி பல தியாகங்களை செய்து, நாளிதழ் வினியோகம் செய்பவர்களுக்கு அரசுகளிடமிருந்து பெரிய அளவில் எந்த சலுகையும் கிடைத்ததில்லை.
இந்நிலையில் நாளிதழ் வினியோகம் செய்வோருக்கு மருத்துவ சேவை, விபத்து காப்பீடு வழங்க வேண்டும் என்று, கர்நாடக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அரசு, நாளிதழ் வினியோகிப்பாளர்களுக்கு விபத்து இழப்பீடு, மருத்துவ உதவிகள் வழங்க முடிவு செய்தது.
இதற்காக www.eshram.gov.in. என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது. இதில் விண்ணப்பிப்பவர்கள் 16 வயது முதல் 59 வயது வரை இருக்க வேண்டும்; வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. அரசின் இந்த அழைப்பு குறித்து, நாளிதழ் வினியோகிப்பாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
*அரசுக்கு நன்றி
கடந்த 45 ஆண்டுகளாக நாளிதழ் வினியோகம் செய்து வருகிறேன். அரசிடம் இருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. தற்போது விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ சேவை பெறுவதற்கு, அரசிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி.
புருஷோத்தம், பசவா நகர்.
*நல்ல விஷயம்
நாளிதழ் வினியோகிப்பாளர்களுக்கு விபத்து காப்பீடு, மருத்துவ சிகிச்சை கிடைப்பது நல்ல விஷயம். நாளிதழ் வினியோகம் செய்ய சென்ற, ஒரு வாலிபர் விபத்தில் சிக்கி கோமாவுக்கு சென்றார். அவரது குடும்பத்தை யார் காப்பாற்றுவர் சொல்லுங்கள்.
ராஜு, பேங்க் காலனி, பெங்களூரு.
.......
உடனடியாக செய்வரா?
நாளிதழ் வினியோகம் செய்பவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. கமிஷன் பணத்திற்காக கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம். தற்போது காப்பீடு, மருத்துவ சேவை பெறலாம் என அழைப்பு விடுத்துள்ளனர். இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
ராமப்பா-,
பொம்மனஹள்ளி