மாற்றுத்திறனாளிகளை சினிமாவில் தவறாக சித்தரிப்பதற்கு கண்டனம்
மாற்றுத்திறனாளிகளை சினிமாவில் தவறாக சித்தரிப்பதற்கு கண்டனம்
மாற்றுத்திறனாளிகளை சினிமாவில் தவறாக சித்தரிப்பதற்கு கண்டனம்
ADDED : ஜூலை 09, 2024 01:02 AM
புதுடில்லி, கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ஆங் மிச்சோலி என்ற திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளை தவறாக சித்தரித்ததை கண்டித்து, உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் நிபுன் மல்ஹோத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார்.
திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அவர்கள் மனம் புண்படும்படி இருந்ததாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், திரைப்படம் உள்ளிட்ட காட்சி ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளை சித்தரிப்பது தொடர்பான வழிக்காட்டுதல்களை வெளியிட்டனர். அந்த உத்தரவில் கூறியதாவது:
திரைப்படம் உள்ளிட்ட காட்சி ஊடகங்களில், தவறான சமூக புரிதலுக்கு வழிவகுக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் விதமாக 'ஊனம்' உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.
அவர்கள் படும் சிரமங்களை மட்டும் காட்சிப்படுத்தாமல், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றம், திறமைகள், சமூகத்துக்கு அவர்கள் அளிக்கும் பங்கு ஆகியவற்றை காட்சிப்படுத்த வேண்டும். இது தொடர்பான விஷயங்களை தணிக்கை வாரியம் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.