Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சுற்றுச்சூழல் அனுமதிக்கு லஞ்சம் ஹிண்டால்கோ மீது வழக்குப்பதிவு

சுற்றுச்சூழல் அனுமதிக்கு லஞ்சம் ஹிண்டால்கோ மீது வழக்குப்பதிவு

சுற்றுச்சூழல் அனுமதிக்கு லஞ்சம் ஹிண்டால்கோ மீது வழக்குப்பதிவு

சுற்றுச்சூழல் அனுமதிக்கு லஞ்சம் ஹிண்டால்கோ மீது வழக்குப்பதிவு

ADDED : ஆக 07, 2024 02:49 AM


Google News
புதுடில்லி, ஒடிசாவின் தலாபிராவில் நிலக்கரி சுரங்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை லஞ்சம் கொடுத்து பெற்றதாக, ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்தின் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

ஒடிசா மாநிலம் ஜார்சு குடா பகுதியில் உள்ள தலாபிரா நிலக்கரி சுரங்கத்தை 2001 முதல் ஹிண்டால்கோ நிறுவனம் நடத்தி வருகிறது.

முதலில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெற்றது. பின், 2009ல் இந்த அளவை ஆண்டுக்கு 15 லட்சம் டன்னாக அதிகரிப்பதற்கான அனுமதியை பெற்றது.

இரண்டாவது அனுமதி பெற்ற சில மாதங்களிலேயே, மீண்டும் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான அளவை, 15 லட்சம் டன்னிலிருந்து 30 லட்சம் டன்னாக அதிகரித்து அனுமதியை கோரியது. அதையும் நிபுணர் மதிப்பீட்டு குழு பரிசீலித்து ஒப்புதல் வழங்கியது.

ஒரு நிறுவனம் தன் அனைத்து புதிய திட்டங்களுக்கும், ஏற்கனவே உள்ள தயாரிப்புகளின் விரிவாக்கம் மற்றும் மாற்றங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது 2006 முதல் கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில் ஹிண்டால்கோ நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இயக்குனராகவும், நிபுணர் மதிப்பீட்டு குழுவின் உறுப்பினராகவும் இருந்த சாந்தினிக்கு லஞ்சம் தந்து, முறைகேடாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகார் குறித்து சி.பி.ஐ., 2016ல் ஆரம்பக்கட்ட விசாரணையை துவங்கியது. எட்டு ஆண்டுகால நீண்ட விசாரணைக்கு பின், தற்போது ஹிண்டால்கோ நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன்னாள் இயக்குனர் சாந்தினி ஆகியோர் மீது, ஊழல் தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ., நேற்று வழக்கு பதிந்தனர்.

இதுகுறித்து ஹிண்டால்கோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'இது பழைய விவகாரம். அரசின் ஒப்பந்த ரத்து செயல்முறையின் ஒரு பகுதியாக, இந்த சுரங்க ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இது அனைவரும் அறிந்தது. இதுபோன்று 100 சுரங்கங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன.' என்று கூறியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us