நீதிமன்றங்களை கோவில் என்று சொல்வது ஆபத்து: தலைமை நீதிபதி
நீதிமன்றங்களை கோவில் என்று சொல்வது ஆபத்து: தலைமை நீதிபதி
நீதிமன்றங்களை கோவில் என்று சொல்வது ஆபத்து: தலைமை நீதிபதி
ADDED : ஜூன் 30, 2024 12:23 AM

கோல்கட்டா: ''நீதிமன்றங்களை மக்கள், கோவில் என்று சொல்வது, நீதிபதிகள் அதன் கடவுளாக நினைத்துக் கொள்ளும் பெரிய ஆபத்தை உருவாக்கி விடுகிறது, என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டார்.
தேசிய நீதித்துறை அகாடமியின் மண்டல மாநாடு, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் நேற்று நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:
'யுவர் ஹானர், லார்ட்ஷிப், லேடிஷிப்' என்று நீதிபதிகளை குறிப்பிடுகின்றனர். சில நேரங்களில் மக்கள் நீதிமன்றங்களை, நீதியின் கோவிலாக குறிப்பிடுகின்றனர்.
இது மிகப் பெரும் ஆபத்து. அப்படி பார்த்தால், நாங்கள் அந்தக் கோவிலின் கடவுள்களாக நினைத்துக் கொள்ளும் அபாயத்தை உருவாக்கிவிடும்.
நீதிமன்றங்களும், நீதிபதிகளும், மக்களுக்கு சேவையாற்றுகின்றனர். அவ்வாறு மக்களை சேவையாற்றுவதாக நினைக்கும்போது, பரிவு, பச்சாதாபம் உள்ளிட்டவற்றுடன் நீதிமன்றங்கள் வழக்கை பார்க்க முடியும்.
குற்றவாளியாக இருந்தாலும், தண்டனை வழங்கும் போது, மனிதத்தன்மையை கையாள வேண்டும். அவரும் ஒரு மனிதர் தானே என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்தும் உயரிய கடமையுடன் இது இணைந்திருக்க வேண்டும்.
இது, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமல்ல, மாவட்ட அளவிலான நீதிமன்றங்களுக்கும் பொருந்தும். ஏனெனில், மக்கள் முதலில் உங்களிடம் தான் வருகின்றனர்.
மொழி ஒரு தடையாக மக்களுக்கு இருக்கக் கூடாது. இந்த நோக்கத்துடன்தான் நீதிமன்ற தீர்ப்புகளை, மக்களுக்கு அவர்களுடைய மொழியில் மொழிபெயர்த்து வழங்கும் திட்டத்தை துவக்கினோம். அதிகளவில் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.