ADDED : ஜூன் 02, 2024 02:02 AM
அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபின் அஜ்னாலா அருகே லகுவால் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபிந்தர் சிங். இவர், சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, பைக்கில் லகுவால் கிராமத்துக்கு வந்த இருவர், வீட்டு வாசலில் அமர்ந்திருந்த தீபிந்தர் சிங் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அவர் அருகே இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபிந்தர் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், காயம் அடைந்த நான்கு பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.