விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு துண்டு
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு துண்டு
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு துண்டு
ADDED : ஜூன் 18, 2024 02:05 AM

பெங்களூரு, பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஏர் - -இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில், இரும்பு துண்டு கிடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு, மதுரஸ் பால் என்பவர், ஜூன் 9ம் தேதி ஏர் இந்தியா நிறுவன விமானத்தில் பயணித்தார். அவருக்கு நுாடுல்ஸ் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிடும்போது, வாயில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது. அதை வெளியே எடுத்து பார்த்த போது, இரும்பு துண்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தன் மொபைல் போனில் படம் எடுத்து கொண்டார். பின், தன் நாட்டுக்கு சென்ற பின், ஏர் - இந்தியா நிறுவனத்திற்கு புகார் அளித்திருந்தார்.
இதை தொடர்ந்து விசாரணை நடத்திய நிறுவனம், 'எங்கள் உணவகங்களில் பயன்படுத்தப்படும் காய்கறி பதப்படுத்தும் இயந்திரத்தில் இருந்து இந்த இரும்பு துண்டு விழுந்துள்ளது தெரியவந்தது.
'இனி, கடினமான காய்கறிகளை வெட்டிய பின், அனைத்தும் சோதனை செய்யப்படும். உணவு சப்ளை செய்த நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்' என, தெரிவித்துள்ளது.