அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு
அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு
அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 06, 2024 11:54 PM
புதுடில்லி, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 293 தொகுதிகளை பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
நேற்று முன் தினம் டில்லியில் நடந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார்.
வரும் 9ம் தேதி பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும் என கூறப்படுகிறது. பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அண்டை நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபரின் செய்தி பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 'அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
அதிபர் விக்கிரமசிங்கே அதை ஏற்றுக்கொண்டார்' என கூறப்பட்டுள்ளது. இதே போல் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகன்நாத் ஆகியோரிடமும் பிரதமர் மோடி தனித் தனியே தொலைபேசியில் பேசும் போது, பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, முறையான அழைப்பிதழ் நேற்று அனைவருக்கும் அனுப்பப்பட்டது.
கடந்த 2014ல் மோடியின் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 2019ல் பிம்ஸ்டெக் எனும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.