ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ADDED : ஜூலை 08, 2024 01:54 AM
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் இருவேறு கிராமங்களில் நடந்த துப்பாக்கி சண்டையில், ஆறு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள மாடர்காம் மற்றும் சின்னிகாம் என்ற இரு கிராமங்களில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன்தினம் துப்பாக்கி சண்டை நடந்தது.
பல மணி நேரம் தொடர்ந்த இந்த சண்டையில், மாடர்காம் கிராமத்தில் இரு பயங்கரவாதிகளும், சின்னிகாம் கிராமத்தில் நான்கு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையில், கமாண்டோ படை வீரர் உட்பட இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., ஆர்.ஆர்.ஸ்வைன் கூறியதாவது:
ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது, நம் படையினருக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. நாம் பெற்றுள்ள வெற்றி, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான போராட்டம் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறியாகவே தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாகவே பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க துவங்கிஉள்ளன.
இதற்கு, லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் பிரிவான, 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' என்ற அமைப்பே முக்கிய காரணம் என, என்.ஐ.ஏ., தெரிவித்துஉள்ளது.
இந்த அமைப்பின் சைப்புல்லா சஜித் ஜாட் என்ற பயங்கரவாதி, இந்த தாக்குதல்களை ஒருங்கிணைப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது தலைக்கு, 10 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் இருந்தபடி இந்த தாக்குதல்களை அவர் திட்டமிடுவதாகவும், முன்னர் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இவர் பணியாற்றி வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த குவாசிம் என்ற நபரை, இவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வருவதாக தெரியவந்துள்ளது. அவரை, என்.ஐ.ஏ., வலை வீசி தேடி வருகிறது.