ADDED : ஜூலை 27, 2024 12:17 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் அலிபாக் அருகே அரபிக்கடலில் சென்ற இழுவைக் கப்பலில் சிக்கிய, 14 பணியாளர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
மஹாராஷ்டிராவில் ரத்னகிரி மாவட்டத்தின் ஜெய்காத் பகுதியில் இருந்து ராய்காட் மாவட்டத்தின் சாலவ் பகுதிக்கு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான இழுவைக் கப்பல் ஒன்று அரபிக்கடலில் நேற்று முன்தினம் சென்றது.
ராய்காட் மாவட்டத்தின் அலிபாக் கடற்கரை யையொட்டி கோலாபா கோட்டை அருகே சென்றபோது, அந்த கப்பல் இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, அதில் சென்ற கப்பல் பணியாளர்கள் 14 பேர் நடுக்கடலில் சிக்கித் தவித்தனர்.
இதுதொடர்பாக ராய்காட் போலீசார், கடலோரக் காவல் படையினருக்கு தகவல் அளித்தனர்.
இதன்படி, சிறிய ரக ஹெலிகாப்டரில் சென்று, கப்பலில் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர்.
அப்போது கனமழை, கடல் சீற்றம், சூறைக்காற்று போன்ற வானிலை மாற்றங்களால் அவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
எனினும், கடுமையான சூழலையும் பொருட்படுத்தாமல் கடலோரக் காவல்படையினர், கப்பலில் சிக்கியிருந்த 14 பணியாளர்களையும் பத்திரமாக மீட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.