'சென்னபட்டணாவில் 10,000 புகார் மனுக்கள்'
'சென்னபட்டணாவில் 10,000 புகார் மனுக்கள்'
'சென்னபட்டணாவில் 10,000 புகார் மனுக்கள்'
ADDED : ஜூலை 08, 2024 06:37 AM

பெங்களூரு: ''குமாரசாமி எம்.எல்.ஏ.,வாக இருந்த சென்னபட்டணா தொகுதியில் இருந்து 10,000 புகார்கள் வந்துள்ளன,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
'கர்நாடகா காங்கிரஸ் அரசு, மக்களுக்கு எதுவும் செய்யாததால், மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியில், 3,500 மனுக்கள் வந்துள்ளன' என மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்து நேற்று சிவகுமார் அளித்த பேட்டி:
குமாரசாமி எம்.எல்.ஏ.,வாக இருந்த சென்னபட்டணா தொகுதியில் இருந்து 10,000 புகார்கள் வந்துள்ளனவே. இத்தொகுதிக்கு குமாரசாமி எதுவும் செய்யவில்லை என்பதற்கு இதைவிட பெரிய ஆதாரம் வேண்டுமா.
குமாரசாமி மட்டும் தான் அரசியல் செய்கிறாரா. நாமும் அரசியல் செய்யலாம். ஆனால், எங்களுக்கு அது முக்கியமல்ல; மக்களுக்கு சேவை செய்வதே முக்கியம். 'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் சொத்து இழந்தவர்கள், விண்ணப்பித்து இழப்பீடு பெற்றுள்ளனர். விதிமுறைப்படி நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு மேம்பாட்டு வாரியத்தில் 60க்கு 40 என்ற விகிதத்திலும்; மூடாவில் 50க்கு 50 என்ற விகிதத்திலும் நில இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இவ்விவகாரத்தை பா.ஜ., - ம.ஜ.த., அரசியல் ஆக்கி விளையாடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.