Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/தரவுகள், காலாண்டு முடிவுகள் சந்தையை தீர்மானிக்கும்

தரவுகள், காலாண்டு முடிவுகள் சந்தையை தீர்மானிக்கும்

தரவுகள், காலாண்டு முடிவுகள் சந்தையை தீர்மானிக்கும்

தரவுகள், காலாண்டு முடிவுகள் சந்தையை தீர்மானிக்கும்

ADDED : ஜன 13, 2024 07:50 PM


Google News
Latest Tamil News
திங்கள்: நிப்டி குறியீட்டில் பங்கெடுத்துள்ள நிறுவனங்களின் சராசரி காலாண்டு லாபத்தின் வளர்ச்சி, இரண்டு இலக்க சதவீத அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்க வாய்ப்புள்ளது என்ற கணிப்பு, திங்களன்று வெளியானது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில், ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 4,800 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை செய்திருந்தனர் என்ற செய்தி வெளியானது.

செவ்வாய்: கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த வாகன பதிவுகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த பதிவுகளின் எண்ணிக்கையை விட, 21 சதவிகிதம் அதிகமாக இருந்தது என்ற செய்தி வெளியானது. சிறு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டுகளில் செய்த முதலீடு, 50 லட்சம் கோடி என்ற அளவில் டிசம்பர் மாத இறுதியில் இருந்ததாகவும் செய்திகள் வந்தன.

புதன்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2024--25 மற்றும் 2025--26ல் முறையே 6.40 மற்றும் 6.50 என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கை வெளியானது.

வியாழன்: கடந்த டிசம்பர் மாதத்தில், மியூச்சுவல் பண்டுகளில் புதிதாக 40 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்ற செய்தி வெளியானது.

வெள்ளி: தொழில்நுட்பத் துறை பங்குகளில், முதலீட்டாளர்கள் அதிக ஈடுபாடு காட்டியதால், நிப்டி கணிசமான அளவில் அதிகரித்தது. 2023ம் ஆண்டில் பயணிகள் வாகனங்களின் விற்பனை முதல்முறையாக 40 லட்சம் என்ற அளவை எட்டியிருந்தது என்ற வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செய்தி வெளியானது.

வரும் வாரம்


 மொத்தவிலை குறியீட்டு அடிப்படையில் உணவு, எரிபொருட்களின் பணவீக்கம், பயணிகள் வாகன விற்பனை, வர்த்தக சம நிலை, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன

 சில்லரை விற்பனை, கட்டடங்கள் கட்டுவதற்கு தரப்பட்ட அனுமதிகள், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, மிச்சிகன் வாடிக்கையாளர் மனோபாவம், போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.

கவனிக்க வேண்டியவை


 கடந்தவாரம் திங்களன்று கணிசமான இறக்கத்தை சந்தித்த நிப்டி, அதன் பின் உயர ஆரம்பித்து, வெள்ளியன்று புதிய உச்சத்தை தொட்டு நிறைவடைந்தது. 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கிறது. காலாண்டு முடிவுகள் மற்றும் அவை குறித்த எதிர்பார்ப்புகளே சந்தை எந்த மாதிரியான பாதையில் செல்லும் என்பதை தீர்மானிப்பதாக இருக்கும்

 உலகளாவிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால், அதன் மீதும் வர்த்தகர்கள் தொடர்ந்து கவனம் வைத்தே செயல்படவேண்டியிருக்கும்

 டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் ஏறுவதற்கு சற்று தயங்கும் சூழல் தென்படுவதால், வர்த்தகர்கள் வியாபாரத்தின் அளவை குறைத்தும், ஸ்டாப் லாஸ்களை மிகவும் அருகில் வைத்துக்கொண்டும்; அதனை அடிக்கடி மாற்றம் செய்யாமல் செயல்படுவதுமே சிறந்த உத்தியாக இருக்க வாய்ப்புள்ளது.

வாரத்தின் இறுதியில் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில், நிப்டி ஏறுவதற்கு தயக்கம் உருவான சூழல் இருப்பதைப் போன்ற நிலைமை இருக்கின்றது.

வெளிவர இருக்கின்ற காலாண்டு முடிவுகளுக்கு ஏற்றாற்போல் ஏற்ற இறக்கங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், வர்த்தகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், குறுகிய அளவிலான நஷ்டம் குறைக்கும் ஸ்டாப் லாஸ்களை வைத்துக்கொள்வதுடன், லாபம் வந்தால், உடனுக்குடன் அதனை வெளியே எடுத்துக்கொள்ளும் வகையிலான வர்த்தக திட்டங்களுடன் செயல்படுவது குறித்து பரிசீலனை செய்வது நல்லது.

நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்

நிப்டி 21,586, 21,278 மற்றும் 21,094 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும் (சப்போர்ட்), 22,066, 22,237 மற்றும் 22,420 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும் (ரெசிஸ்டென்ஸ்) டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. நிப்டியின் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 21,757 என்ற அளவிற்கு கீழே போகாமல் தொடர்ந்து வர்த்தகமாக வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us