ADDED : மே 17, 2026 12:31 AM

இன்போசிஸ் நிறுவனம் 1981ம் ஆண்டு, புனே நகரத்தில் என்.ஆர்.நாராயணமூர்த்தி மற்றும் ஆறு பொறியாளர்களால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பல்வேறு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. டி.சி.எஸ்., நிறுவனத்துக்கு அடுத்த படியாக, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி., நிறுவனமாக விளங்குகிறது.
'பார்ச்சூன் 500' பட்டியலில் உள்ள 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. 2026ம் நிதி ஆண்டில், இந்நிறுவனம் கிட்டத்தட்ட 1.79 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.
மேலும், உலகம் முழுதும் 3.29 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.
கொரோனாவுக்கு பிறகு
கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு, தங்கள் வணிகங்களில் கொண்டு வரப்பட்ட புதிய டிஜிட்டல் மாற்றங்கள் தற்காலிகமானவை அல்ல, அவை நிரந்தரமானவை என்பதை நிறுவனங்கள் புரிந்து கொள்ள இந்த காலகட்டம் வழிவகுத்தது.
இதன் காரணமாக, டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ், கிளவுட் கட்டமைப்பு மற்றும் வணிகத்தின் முக்கிய செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவது போன்ற எதிர்காலத் திட்டங்களிலேயே இந்நிறுவனம் தீவிர கவனம் செலுத்தியது.
மந்தநிலை காலகட்டம் கடந்த 2022ம் ஆண்டுக்குப் பின், வாடிக்கையாளர்கள் தங்களின் புதிய திட்டங்களுக்கான செலவுகளை குறைத்து, மிகவும் எச்சரிக்கையாக செயல்பட தொடங்கினர். இந்த எச்சரிக்கை போக்கு, ஐ.டி., துறையை கடந்து ஹை-டெக், டெலிகாம் மற்றும் ரீடெய்ல் துறைகளுக்கும் பரவியது.
இன்போசிஸ் நிறுவனம் பல பெரிய ஒப்பந்தங்களை கைப்பற்றிய போதிலும், அவை உடனடியாக வருவாயாக மாறவில்லை.
புதிய ஒப்பந்தங்களை முழுமையாக தொடங்கி அவற்றிலிருந்து வருவாய் கிடைக்க, நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை காலம் எடுத்ததே, இந்த இடைவெளிக்கு காரணமாக அமைந்தது.
கடந்த 2023ம் நிதியாண்டில், இந்நிறுவனத்தின் பெரிய ஒப்பந்தங்களின் ஒட்டு மொத்த மதிப்பு வளர்ச்சி வெறும் 3 சதவீதமாக மட்டுமே இருந்தது. இதன் தொடர்ச்சியாக, 2024ம் நிதியாண்டில், லாப வரம்பு மேலும் 30 அடிப்படை புள்ளிகள் சரிந்து, 20.70 சதவீதமாகக் குறைந்தது.
கடந்த, 2025ம் நிதியாண்டு அதிக பணவீக்கம், அதிக வட்டி விகிதம், பல்வேறு நாடுகளில் தேர்தல் மற்றும் புவிசார் அரசியல் சூழல் போன்றவற்றுடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2026ம் நிதி ஆண்டில், இந்நிறுவனம் டாலர் மதிப்பில் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் ஐரோப்பிய சந்தை 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மேலும், இண்டஸ்ட்ரியல்ஸ், எனர்ஜி, யூட்டிலிட்டிஸ் துறைகளின் சிறப்பான பங்களிப்பால், இன்போசிஸின் மொத்த வருவாயில் ஐரோப்பிய வருவாய் 30 சதவீத பங்கைப் பெற்றுள்ளது.
நிறுவனத்தின் பெரிய ஒப்பந்தங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 28 சதவீதம் வளர்ச்சியைக் கண்டபோதிலும், 2027-ம் நிதி ஆண்டிற்கு, குறைந்த வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டையே வழங்கியுள்ளது.
தனது ஆண்டு வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டை 1.50 - 3.50 சதவீதம் என்ற அளவில் நிர்ணயித்துள்ளது.
வாடிக்கையாளர் நிறுவனங்கள் சந்தித்து வரும் பொருளாதார மந்தநிலை ஒருபுறமிருக்க, போதிய லாபம் தராத சில ஒப்பந்தங்களை ஏற்க வேண்டாம் என்று இன்போசிஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவும், இந்த வர்த்தகக் குறைப்புக்கு காரணமாக அமைந்தது.
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏ.ஐ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, 'இன்போசிஸ் டோபாஸ்' என்ற ஏ.ஐ-., முன்னுரிமை சேவைகள், தீர்வுகள் மற்றும் தளங்களை இன்போசிஸ் நிறுவனம், கடந்த 2023-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும்போது, இன்போசிஸ் நிறுவனம் வழக்கமான கார்ப்பரேட் திட்டங்களில் பொதுவாக, 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பரவலான உற்பத்தித் திறன் மேம்பாட்டைக் காண்கிறது.
அதே நேரத்தில், பெரிய அளவிலான வாடிக்கையாளர் சேவை மற்றும் மென்பொருள் மேம்பாட்டு சுழற்சி போன்ற பிரிவுகளில், இந்தத் திறன் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மிக உயர்வாக இருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
எதிர்கால கண்ணோட்டம் டி.சி.எஸ்., - ஹெச்.சி.எல்., டெக் போன்ற சக நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இன்போசிஸ் நிறுவனம் வரலாற்று ரீதியாகவே தனது வருவாய் கலவையில் விருப்பத்தேர்வு பணிகளின் அதிக பங்கைக் கொண்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் காலங்களில், பெரிய ஒப்பந்தங்களை வெல்வது இந்நிறுவனத்திற்கு மிகவும் கடினமாக இருக்கக்கூடும்.
மேலும், ஏ.ஐ., சார்ந்த உற்பத்தித் திறன் மேம்பாடுகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 2026ம் நிதியாண்டில் 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இந்நிறுவனம் திரும்பப் பெற்ற போதிலும், 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதன் பங்கு விலை 32 சதவீதம் சரிவடைந்துஉள்ளது.
'ஆந்த்ரோபிக், ஓப்பன் ஏ.ஐ., ஆகிய நிறுவனங்களின் புதிய ஏ.ஐ., மாதிரி கள், இத்துறையின் ஒட்டு மொத்த வருவாயைச் சுருக்கிவிடக்கூடும் என்ற அச்சமே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
நிறுவனத்தின் மதிப்பீடு கள் அதன் உச்சத்திலிருந்து தற்போது சரிவடைந்து உள்ளது. ஒட்டுமொத்த உலகளாவிய பொருளாதாரம் மற்றும் ஐ.டி., துறையில் நிலவி வரும் பலதரப்பட்ட சவால்களைக் கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் பங்குகளில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.





